மத்திய அரசின் விவசாய சட்டங்களை செயல்படுத்த இடைக்கால தடை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை செயல்படுத்த இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
Recommended Video
மத்திய அரசின் விவசாய சட்டங்கள் மற்றும் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது.
மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கார் விபத்தில் படுகாயம் - மனைவி, உதவியாளர் மரணம்
நிறுத்திதான் வைக்கலாமே
இவ்வழக்கின் விசாரணையில் நேற்று, விவசாய சட்டங்களுக்கு தடை விதிக்கமாட்டோம்; அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என உத்தரவு பிறப்பிக்கமாட்டோம். ஆனால் சிறிது காலத்துக்கு விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை மட்டும் மத்திய அரசு நிறுத்தி வைத்தால்தான் என்ன தலைமை நீதிபதி போப்டே கேள்வி எழுப்பினார்.
உச்சநீதிமன்றம் அதிருப்தி
ஆனால் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், சட்டங்கள் செயல்படுத்துவதை நிறுத்தினால் 2,000 விவசாயிகள் பாதிக்கப்படுவர் என கூறினார். மத்திய அரசின் இத்தகைய போக்குக்கு தலைமை நீதிபதி போப்டே அதிருப்தியை வெளியிட்டிருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வல்லுநர் குழு ஒன்றை அமைக்க பரிசீலித்து வருவதாகவும் போப்டே தெரிவித்திருந்தார்.
உச்சநீதிமன்ற குழு
இந்த குழு அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்தை அறியவும் ஒரு குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவினர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை முடிவில் 40 விவசாய சங்கங்கள் கூட்டமைப்பானது, மத்திய அரசின் பிடிவாதப் போக்கு தொடருவதால் உச்சநீதிமன்றம் அமைக்கும் குழு முன்பாக ஆஜராவதில்லை என அறிவித்தது.
இன்றும் விசாரணை
இதனிடையே இன்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்று வருகிற்து உள்ளது. இன்றைய விசாரணையின் தொடக்கத்தில், பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு 3 விவசாய சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இயலுமா? என அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலிடம் தலைமை நீதிபதி போப்டே கேள்வி எழுப்பினார். இவ்வழக்கில் விவசாயிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சர்மா, தங்களது வாதங்களை உச்சநீதிமன்றத்தில் முன்வைக்க இயலவில்லை என்பதால் நீதிமன்றம் அமைக்கும் குழு முன்பாக ஆஜராகப் போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளாக கூறினார். இதற்கு அதிருப்தியை தலைமை நீதிபதி வெளியிட்டார். மேலும் நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்கும் நிலை உள்ளதாகவும் சர்மா குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, விவசாய நிலங்களை நிறுவனங்கள் வாங்குவது தொடர்பாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றார்.
இடைக்கால தடை
இன்றைய விசாரணைகளின் முடிவில், மத்திய அரசின் விவசாய சட்டங்களை செயல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக இடைக்கால தடை விதித்தது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்றும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.