பெகாசஸ் உளவு உண்மையாக இருந்தால் இது தீவிரமான பிரச்சினை: உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து
டெல்லி: பெகாசஸ் கண்காணிப்பு உண்மையாக இருந்தால் இது தீவிரமான பிரச்சினை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்தது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா அடங்கிய பெஞ்ச், மூத்த பத்திரிக்கையாளர்கள், எடிட்டர் கில்ட் ஆப் இந்தியா, ராஜ்யசபா எம்பி சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்எல் ஷர்மா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை ஒன்றாக்கி விசாரணை நடத்தியது.
ஊடகவியலாளர் பரஞ்சோய் குஹா தாக்கூர்தா, எஸ்என்எம் அப்டி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ் குமார் சிங் மற்றும் இப்சா ஷடாக்ஷி ஆகியோர் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
என் ராம் மற்றும் சஷிகுமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், பெகாசஸ் ஸ்பைவேரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த விதத்திலாவது பயன்படுத்தியதா என்பதை மத்திய அரசு தெரியப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணுவ பயன்பாட்டுக்கான ஸ்பைவேரைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட கண்காணிப்பு என்பது தனியுரிமைக்கான உரிமையை மீறுவதாகும். கே.எஸ்.புட்டசாமி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 14, 19 மற்றும் 21 வது பிரிவுகளின் கீழ் தனியுரிமை என்பது, அடிப்படை உரிமையாகக் கருதப்படுகிறது. ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் உளவு பார்க்கப்பட்டுள்ளது அடிப்படை பேச்சு மற்றும் கருத்துரிமைக்கான அடிப்படையை மீறும் செயல் என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
இந்திய எடிட்டர்ஸ் கில்ட் (EGI) இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கண்காணிப்புக்காக ஸ்பைவேர்களைப் பயன்படுத்துவதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட விவரங்கள் மற்றும் அத்தகைய ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்ட நபர்களின் விவரங்களை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
பரஞ்சோய் குஹா தகூர்தா மற்றும் பிறர் தங்கள் மனுவில், பெகாசஸ் போன்ற ஸ்பைவேர்களை நிறுவுதல் அல்லது பயன்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என்று அறிவிக்க உத்தரவிட வேண்டும். அரசு நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பை பயன்படுத்தியதாக கூறப்படுவது அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஜான் பிரிட்டாஸ் தனது மனுவில், இஸ்ரேலிய மென்பொருளான பெகாசஸைப் பயன்படுத்தி மக்களை உளவு பார்த்த செய்திகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும். அதை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். குற்றச்சாட்டுகளின் தீவிர தன்மை இருந்தபோதிலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அரசு அக்கறை காட்டவில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "பெகாசஸ் உளவு தொடர்பான தகவல்கள் உண்மையாக இருந்தால் சந்தேகமே இல்லாமல், குற்றச்சாட்டுகள் தீவிரமானவைதான்" என்று தலைமை நீதிபதி என்வி ரமணா குறிப்பிட்டார்.
"அதேநேரம் எங்களிடம் சில கேள்விகள் உள்ளன" என்றும் நீதிபதி தெரிவித்தார். ஊடகத்தில் வந்த தகவலை மட்டுமே நம்பாமல் வேறு ஆதாரங்கள் இருக்கிறதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
செய்தித்தாள்களில் வந்த ஆதாரங்கள் அடிப்படையில் வழக்குகள் தொடரக் கூடாது. செய்தித்தாள்கள் அல்லாமல் வேறு ஆதாரங்கள் என்ன இருக்கின்றன? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அமெரிக்கா நீதிமன்றத்தில் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் பி.எல். சர்மா தனது வாதத்தின் போது சுட்டிக்காட்டினார்
இருப்பினும், தலைமை நீதிபதி இரண்டு கேள்விகளை மீண்டும் மீண்டும் எழுப்பினார்:
1. பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக ஏன் எஃப்ஐஆர் தாக்கல் செய்யவில்லை?
2. 2019ல் பெகாசஸ் பிரச்சினை வெளிவந்தாலும் இப்போது ஏன் வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றன? என்ற இரு கேள்விகளை நீதிபதி திரும்ப திரும்ப எழுப்பினார்.
Recommended Video
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், என்.ராம் மற்றும் சஷிகுமார் ஆகியோருக்காக ஆஜரானார். அவர் வாதிடுகையில், பெகாசஸ் உளவு பற்றி குடிமக்கள் ஆய்வகத்தின் அறிக்கைகளுக்குப் பிறகு இப்போதுதான் தெரியும் என்பதால், இப்போது வழக்கு தொடர்ந்தோம் என்று பதிலளித்தார். மேலும், பெகாசஸ் தனது சேவைகளை அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்வதால் தனிநபர்கள் அதை வாங்கி பயன்படுத்த வழி இல்லை. இது சம்பந்தமாக, பெகாசஸை உருவாக்கிய இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ தொழில்நுட்பங்களுக்கு எதிராக வாட்ஸ்அப் நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பதை அவர் குறிப்பிட்டார், அரசாங்கங்கள் மட்டுமே ஸ்பைவேர் சேவைகளை வாங்க முடியும்.