இப்படி நடந்ததில்ல! உச்சநீதிமன்றத்துக்கே சங்கடம் -பணமதிப்பிழப்பு வழக்கில் மத்தியஅரசை சாடிய நீதிபதிகள்
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக வழக்கு விசாரணையில் பதில் மனுவை தாக்கல் செய்யாத மத்திய அரசை கடுமையாக நீதிபதிகள் விமர்சித்து உள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு 8 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
கருப்பு பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிப்பேன் என உறுதியளித்து இந்த பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பை வெளியிட்டார்.
பணமதிப்பிழப்பு வழக்கு:மத்திய அரசுக்கு சிக்கல்? முக்கிய ஆவணங்களை ரெடியாக வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, "பண மதிப்பிழப்பு திட்டத்திற்கான நோக்கம் பாராட்டிற்குரியது. ஆனால், இதன் காரணமாக மக்கள் சந்தித்து வரும் சிரமங்களை நினைத்து கவலை அடைகிறோம்." என தெரிவித்தது.
அரசியல் சாசன அமர்வு
மத்திய அரசின் பொருளாதார கொள்கையில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்த உச்சநீதிமன்றம், இது குறித்து அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.
வழக்கு விசாரணை
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட 57 ரிட் மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், பிஆர் கவாய், ஏஎஸ் போபன்னா, வி ராமசுப்பிரமணியன், பிவி நாகரத்னா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த சில வாரங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
உச்சநீதிமன்றம் அதிருப்தி
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசிடம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் வெங்கடரமணி, இன்று தங்களால் பதில் மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை என்று கூறி வருத்தம் தெரிவித்து கூடுதல் அவகாசம் கேட்டார்.
நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்
மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததால் நீதிபதிகள் ஆதிருப்தி அடைந்து நவம்பர் 24 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். "வழக்கமாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இதுபோல் கலைந்தது இல்லை. விசாரணையை தொடங்கிய பின் இதுபோன் நான் எழுந்தது இல்லை. இது நீதிமதிமன்றத்தை சங்கடப்படுத்தும் செயல்." என விமர்சித்தனர்.