சொகுசு விடுதிகளில் தடுப்பூசி முகாம்கள்.. விதிகளுக்கு புறம்பானவை.. உடனடி நடவடிக்கை தேவை.. மத்திய அரசு
டெல்லி: நட்சத்திர விடுதிகளுடன் இணைந்து தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி முகாம்கள் நடத்துவது வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால் இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் 2ஆம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி முகாம்களுடன் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், நாட்டில் சில தனியார் மருத்துவமனைகள் சொகுசு விடுதிகளுடன் இணைந்து தடுப்பூசி முகாம்களை நடத்துவதாகவும் இது வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்கள்
இது குறித்து மத்திய சுகாதாரத் துறையின் கூடுதல் செயலர் மனோகர் அகானி அனைத்து மாநிலங்களுக்கும் எழுதிய கடிதத்தில், "சொகுசு விடுதிகளுடன் இணைந்து சில தனியார் மருத்துவமனைகள், தடுப்பூசி முகாம் நடத்துவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. இது நாட்டில் தற்போது மேற்கொள்ளப்படும் தடுப்பூசி திட்ட விதிகளுக்கு முரனானது.

மத்திய அரசு விதிகள்
மத்திய அரசின் விதிமுறைகளின்படி, அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி பணிகளை மேற்கொள்ளலாம். அதேபோல தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி பணிகளை மேற்கொள்ளலாம். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் அலுவலகங்களில் தடுப்பூசி முகாமை அரசு மருத்துவமனைகள் மூலம் செயல்படுத்தலாம். தனியார் நிறுவனங்களில் தடுப்பூசி முகாமை தனியார் மருத்துவமனைகள் மூலம் செயல்படுத்தலாம். இந்த 4 முறைகளைப் பின்பற்றி மட்டுமே தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அனுமதியில்லை
இது தவிர முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வீட்டின் அருகே தடுப்பூசி முகாமை அரசு சார்பில் அமைக்கலாம். மேலும், சமுதாயக்கூடம், பஞ்சாயத்து அலுவலகம், கல்லூரிகள், பள்ளிகள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றிலும் அரசு சார்பில் தடுப்பூசி முகாம் நடத்தலாம். ஆனால் மற்ற இடங்களிலும் முறைகளிலும் தடுப்பூசி முகாமை செயல்படுத்த அனுமதியில்லை.

உரிய நடவடிக்கை
எனவே, நட்சத்திர விடுதிகளுடன் இணைந்து தனியார் மருத்துவமனைகள் நடத்தும் தடுப்பூசி முகாம்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அப்படிச் செயல்படும் சொகுசு விடுதிகள், தனியார் மருத்துவமனைகள் மீது மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும்" என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications