ஜூன் 25.. பகல் 1 முதல் 3 மணி...லோக்சபாவில் தமிழக எம்பிக்கள் பதவியேற்பில் என்ன "சம்பவம்" செய்வார்களோ?
டெல்லி: 18-வது லோக்சபா கூட்டத் தொடர் நாளை கூடும் நிலையில் தமிழ்நாட்டின் 39 எம்.பி.க்களும் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர். லோக்சபாவில் கடந்த முறை தமிழக எம்பிக்கள் பதவியேற்கும் போது பெரியார் வாழ்க, தமிழ் வாழ்க என முழக்கமிட பாஜகவினர் ஜெய் ஶ்ரீராம் பாரத் மாதா கீ ஜே கோஷத்தையும் எழுப்பினர். நாளை மறுநாள் பதவியேற்கும் தமிழக எம்பிக்கள் என்ன முழக்கங்களை எழுப்புவர் என்பது எதிர்பார்ப்பு.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 38 இடங்களில் வென்றது; 1 இடத்தில் அதிமுக வென்றது. லோக்சபாவில் தமிழ்நாட்டின் திமுக, அதிமுக எம்பிக்களும் அப்போது தமிழிலேயே பதவியேற்றனர்.

2019-ல் திமுக கூட்டணி எம்பிக்கள் லோக்சபாவில் பதவியேற்ற போது பெரியார் வாழ்க என முழக்கமிட்டனர். சில எம்பிக்கள் தமிழ் வாழ்க எனவும் முழக்கமிட்டனர். தந்தை பெரியார் வாழ்க என திமுக கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட்ட போது ஜெய் ஶ்ரீராம் என பாஜக கூட்டணி எம்பிக்கள் பதில் முழக்கமிட்டனர். அதேபோல தமிழ் வாழ்க என முழக்கமிட்டால் உடனே பாரத் மாதா கீ ஜே என கோரஷாக பாஜக கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட சபை நடவடிக்கைகள் பரபரப்பாகின.
தற்போது தமிழ்நாட்டில் 39 இடங்களையும் திமுக கூட்டணி எம்பிக்களே கைப்பற்றி உள்ளனர். 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் 2 நாட்கள் புதிய எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். இதனையடுத்து ஜூன் 26-ல் சபாநாயகர் தேர்தல் நடைபெறும். ஜூன் 27-ல் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரு சபைகளிலும் விவாதம் நடைபெறும். ஜூலை 2-ந் தேதி பிரதமர் மோடி லோக்சபாவில் உரையாற்றுவார். ஜூலை 3-ந் தேதி வரை இந்த முதல் கூட்டத் தொடர் நடைபெறும்.
18-வது லோக்சபாவின் முதல் கூட்டத்தில் திமுக கூட்டணியின் அனைத்து எம்பிக்களும் ஜூன் 25-ந் தேதி பகல் 1 மணி முதல் 3 மணி வரை பதவியேற்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத்திலேயே தமிழக எம்பிக்கள் என்ன முழக்கங்களை எழுப்பி என்ன சம்பவங்களை செய்யக் காத்திருக்கிறார்களோ என்பது பெரும் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications