தடுப்பூசி பற்றாக்குறையென புலம்பும் மாநிலங்கள்...மறுக்கிறது மத்திய அரசு...என்ன தான் நடக்குது ?
டெல்லி : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றிற்கு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 1.60 லட்சத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது.
உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, 144 தடை, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
ஆனால் கொரோனா தடுப்பூசியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், கூடுதல் மருந்துகளை விரைந்து அனுப்பும்படியும் பல மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசோ, பற்றாக்குறை ஏதும் இல்லை, மருந்துகளை அனுப்புவதில் சிரமம் இல்லை, மாநிலங்கள் சரியாக திட்டமிட வேண்டும் என்கிறது.
சுகாதார அமைச்சர் என்ன சொல்கிறார்
இந்தியாவில் திங்கட்கிழமை நிலவரப்படி 40 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் தினமும் தடுப்பூசியை அதிக அளவில் செலுத்துவதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. சராசரியாக நாள் ஒன்றிற்கு 41.6 லட்சம் என்ற அளவில் வழங்கப்படுகிறது. இது பற்றி சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், ஏதாவது ஒரு மாநிலத்தின், ஒரு மாவட்டத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம். தடுப்பூசிகளின் அளவை மறு மதிப்பீடு செய்யும்படி மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
புள்ளி விபரம் கூறுவது என்ன
இந்தியாவில் இதுவரை 111.18 மில்லியன் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 13.88 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளி விபர கணக்கு தெரிவிக்கிறது. தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் டாப் 5 இடத்தில் உள்ளன. தற்போது இந்தியாவில் கோவேக்சின், கோவிஷிட் ஆகிய இரு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் 5 மருந்துகள் தயாரித்து, அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக ரஷ்ய நிறுவனத்துடன் டாக்டர் ரெட்டியின் லேபாரெட்டரிஸ் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.
எவ்வளவு டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன
சுகாதாரத்துறை அமைச்சக தகவலின்படி, நேற்று காலை 11 மணி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இரண்டு மருந்துகளும் 13.1 கோடி டோஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், வீணடிக்கப்பட்டதையும் சேர்த்து 11.4 கோடிக்கு அதிகமான டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதலாக பைப்லைன் மூலம் 2 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் அனுப்பப்பட உள்ளன. இவை ஏப்ரல் மாத இறுதிக்குள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும் என கூறப்படுகிறது.
மருந்து தட்டுப்பாடா
தடுப்பூசி தட்டுப்பாடு குற்றச்சாட்டு பற்றி ராஜேஷ் பூஷன் கூறுகையில், புள்ளி விபர அடிப்படையில் பார்க்கையில் திட்டமிடல் தான் பிரச்சனை. தடுப்பூசி பற்றாக்குறை இல்லை. சரியான நேரத்திற்கு மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பெரிய மாநிலங்களுக்கு விநியோகம் செய்ய 4 நாட்கள் ஆகியது. நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில் அடுத்த விநியோகம் நடைபெறுகிறது. சிறிய மாநிலங்களுக்கு மருந்துகள் அனுப்ப 7 முதல் 8 நாட்கள் ஆகிறது. இதற்கு வேறு பல பிரச்னைகளும் உள்ளது என்றார்.
இது தான் காரணமாக
மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புக்கள் வேதனை அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் சோதனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பரிசோதனை அளவை விட, பாசிடிவ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது தான் அனைத்து மாநிலங்களுக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்சனை. பல மாநிலங்களில் நடத்தப்படும் ஆர்டி-பிசிஆர் சோதனைகள் மிக குறைவாகவே நடத்தப்படுகிறது என மத்திய அரசு கூறுகிறது. மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், டெல்லி, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டாலும், கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் இங்கு தான் உள்ளது. இந்த கடுமையாக சூழல் தான் நாடு முழுவதும் நிலவுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.