நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது!
டெல்லி: நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இந்தியாவில் இதுவரை சுமார் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா
நாடு முழுவதும் கொரோனா மீண்டும் தனது அசுர பலத்தை காட்டி வருகிறது. கடந்த சில வாரங்களில் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்த கொரோனா தினசரி பாதிப்பில் 60,000-க்கும் மேல் சென்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மக்கள் மாஸ்க் உள்ளிட்ட வழிமுறைகளை மறந்ததே கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கு காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் மாநிலங்கள் சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. தமிழகத்திலும் கூடுதல் கொரோனா பரிசோதனை முகாம்கள், மாஸ்க் உள்ளிட்ட தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி
கொரோனவை தடுக்க கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய 2 தடுப்பூசிகள் நாடு முழுவதும் போடப்பட்டு வருகின்றன.முதல் கட்டமாக மருத்துவ மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இந்தியாவில் இதுவரை சுமார் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
இந்த நிலையில் நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம். அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதற்காக தடுப்பூசி மையங்கள் நாடு முழுவதும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
மையங்களில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்
அதிகளவில் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் அந்தந்த மையங்களுக்கு நேரடியாக சென்றே பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்
நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த 2 வாரத்தில் கட்டாயம் தடுப்பூசியை வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.