இமாச்சல், குஜராத் தேர்தல்.. கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி
டெல்லி: இன்னும் ஒரு சில தினங்களில் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்த தடை நாளை(நவ.12) காலை 8 மணி முதல் டிசம்பர் மாதம் 5ம் தேதி மாலை 5.30 மணி வரை அமலில் இருக்கும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் தற்போது இந்த தடை உத்தரவு வெளிவந்துள்ளது.
குஜராத் தேர்தல்.. மோர்பி பால விபத்தால் எம்எல்ஏவுக்கு கல்தா.. மீட்பு பணி செய்தவருக்கு பாஜகவில் சீட்
தேர்தல்
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் அம்மாநிலத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. முதற்கட்டமாக இமாச்சலப் பிரதேசதில் உள்ள 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு தொடங்குகிறது. பதிவான வாக்குகளில் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இம்மாநிலத்தை பொறுத்த அளவில், ஆளும் கட்சி தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றி பெறாது. ஒரு முறை ஒரு கட்சி ஆட்சியை பிடித்தால் அடுத்த முறை எதிர்க்கட்சி ஆட்சியை கைப்பற்றும்.
இமாச்சலில் காங்கிரஸ்
இவ்வாறு இருக்கையில் ஆளும் பாஜகவை எளிதில் வீழ்த்தி விடலாம் என காங்கிரஸ் நம்பிக்கையுடன் பிரசாரத்தை நடத்தி முடித்துள்ளது. நேற்றுடன் மாநிலம் முழுவதும் பிரசாரம் ஓய்ந்துள்ளது. காங்கிரஸ் சார்ப்பில் பிரியங்கா காந்தி வீடு வீடாக பரப்புரையை மேற்கொண்டார். அதேபோல மாநிலத்தில் பழைய ஓய்வூதியம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என காங்கிரஸ் வாக்குறுதியளித்துள்ளது. இது அம்மாநில மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. மறுபுறம் மத்திய அரசின் திட்டங்களை எடுத்து சொல்லி பாஜகவினர் பரப்புரை மேற்கொண்டனர். அமித்ஷா உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் தற்போது இமாச்சலில் முகாமிட்டுள்ளனர்.
கருத்துக்கணிப்பு
இந்நிலையில், மாநிலத்தில் பாஜக வெற்றி பெரும் என்று தொடக்கத்தில் சொல்லப்பட்டது. பின்னர் குறைந்த எண்ணிக்கையுடன் ஆட்சியை பாஜக கைப்பற்றும் என்றும், மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் எனவும் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு இருக்கையில், நாளை முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் கருத்துக்கணிப்புகள் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாஜவுக்கு இமாச்சலில் பின்னடைவு ஏற்படும் என்று ஏற்கெனவே கூறியிருந்தால்தான் தற்போது கருத்துக்கணிப்பு கூட வெளியிட அனுமதி மறுக்கப்படுகிறது என காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குஜராத்
இமாச்சலில் இந்நிலைமை எனில், குஜராத்தில் மோர்பி பாலம் விபத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5ம் தேதியென இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முடிவுகளை பொறுத்த அளவில் இருமாநிலங்களுக்கும் டிசம்பர் 8ம் தேதிதான் அறிவிக்கப்படுகிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் இது என்பதாலும், 'குஜராத் மாடலை' காட்டி மற்ற மாநிலங்களில் வாக்காளர்களை கவர்வதற்காகவும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற நெருக்கடியில் பாஜக இருக்கிறது.
மாநில நிலைமை
ஆகவே இம்முறை கட்சியின் மூத்த புள்ளிகளுக்கு 'சீட்' கொடுக்காமல் முக்கிய புள்ளிகளுக்கு சீட்டை ஒதுக்கியுள்ளது. இதனால் மூத்த தலைவர்கள் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருக்கின்றனர். மறுபுறம் கடந்த 2 நாட்களில் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். ஆனால் எப்படியாயினும், காங்கிரஸை சமாளித்துவிட்டாலும், ஆம் ஆத்மி கட்சி சவாலாக இருந்து வருகிறது. குஜராத் அரசு பள்ளிகளின் நிலைமை, மோர்பி பாலம் விபத்து போன்றவற்றை ஆம் ஆத்மி கையில் எடுத்து கடுமையாக விமர்சித்து வருகிறது. எனவே இம்முறை குஜராத் மக்கள் பாஜகவுக்கு கைகொடுப்பார்களா? என்பது சந்தேகமே என்று சொல்லப்பட்டு வரும் நிலையில். இந்த பின்னணியில்தான் தேர்தல் ஆணையம் கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.