அக்னிபத்..வன்முறைக் களமாகும் வடமாநிலங்கள்! துணை ராணுவ படைகளில் 10% முன்னுரிமை தருவதாக அரசு சமாதானம்
டெல்லி : இந்திய ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு துணை ராணுவப் படைகளான மத்திய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் முன்னுரிமை அளிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ராணுவத்தில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் சேர்ந்து பணிபுரியும் வகையில் அக்னிபாத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அண்மையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தினால் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறி பீகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாநிலங்களில் வன்முறை
ரயில்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன் ரயில் நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பீகாரில் துணை முதலமைச்சர் ரேணு தேவி, பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலின் வீடுகள் தாக்கப்பட்டன. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

ரயில்கள் ரத்து
இதனிடையே வன்முறை காரணமாக நாடு முழுவதும் இன்று 234 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் 95 ரயில்கள் குறுகிய தூரம் மட்டுமே இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 11 சரக்கு ரயில்கள் பாதை மாற்றிவிடப்பட்டுள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக 340 ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ரயில் நிலையத்தில் கொள்ளை
பீகார் மாநிலத்தின் அர்ரா நகரில் பிஹியா ரெயில் நிலையத்தில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. டிக்கெட் கவுண்டரை கல்வீசித் தாக்கிய போராட்டக்காரர்கள் அதனை தீவைத்துக் கொளுத்தினர். இதனைத் தொடர்ந்து கவுண்டரில் இருந்த 3 லட்ச ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். இதனிடையே அக்னிபாத் திட்டம் குறித்து பரப்பப்படும் தவறான தகவல் மற்றும் தவறான புரிதலால் போராட்டங்கள் நடைபெறுவதாக கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.

துணை ராணுவத்தில் முன்னுரிமை
இந்நிலையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு துணை ராணுவப் படைகளான மத்திய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் முன்னுரிமை அளிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் அக்னிபத் திட்டத்தின் கீழ் பணி செய்வோருக்கு ஓய்வுக்குப் பிறகு துணை இராணுவப் படையில் சேர்வதற்கு 10 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அக்னிபத் திட்டத்திற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பானது போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களை ஓரளவு சமாதானப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications