இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா உச்சம்.. கேரளாதான் முழு காரணம்.. ஷாக் ரிப்போர்ட்!
டெல்லி: இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் கேரளா மட்டும் 70% மேற்பட்ட பாதிப்பை கொண்டுள்ளது.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் இரண்டாவது அலை போட்டு புரட்டி எடுத்தது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கைகள் காலியில்லை என்று நாடே பரிதவித்தது.
அதன்பின்னர் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் கணிசமாக குறைந்தது. கடந்த 2 மாதத்துக்கும் மேலாக கொரோனா குறைந்து வந்த நிலையில் தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் அதிக பாதிப்பு
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 46,759 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனாவுக்கு 509 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்தியா தினசரி அதிகபட்ச பாதிப்புகளை கொண்டுள்ளது. இந்தியாவின் தினசரி கொரோனா எண்ணிக்கை நான்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா அதிகரிக்க முழுக்க, முழுக்க காரணம் கேரளாதான்.

கேரளாதான் காரணம்
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32,801 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது நாட்டின் மொத்த பாதிப்பு 46,759 ஆக இருக்கும் நிலையில் கேரளாவில் மட்டும் 32,801 பாதிப்புகள் உள்ளன. நாட்டின் மொத்த பாதிப்பில் கேரளா மட்டும் 70% மேற்பட்ட பாதிப்பை கொண்டுள்ளது. கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38,14,305 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கடந்த 3 நாட்களாக 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கேரளாவின் நேர்மறை விகிதம்(பாஸிட்டிவ் ரேட்) தற்போது 19.22 சதவீதமாக உள்ளது. இது ஆகஸ்ட் 26 அன்று 18.03 இல் இருந்து அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா எப்படி?
மகாராஷ்டிரா கடந்த 24 மணி நேரத்தில் 4,654 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 170 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. மகாராஷ்டிராவின் கொரோனா மீட்பு விகிதம் 97.02 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.12 சதவீதமாகவும் உள்ளது. டெல்லியில் வைரஸ் தொடர்பான இறப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை, அதே நேரத்தில் 46 புதிய வழக்குகள் நேர்மறை விகிதம் 0.06 சதவிகிதம் பதிவாகியுள்ளதாக நகர சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

1 கோடி பேருக்கு தடுப்பூசி
கடந்த 28 நாட்களாக இந்தியாவின் தினசரி நேர்மறை விகிதம் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. தற்போது 2.19 சதவீதமாக உள்ளது. செயலில் உள்ள வழக்குகள் மொத்த வழக்குகளில் 1.10% ஆகும். இது மார்ச் 2020 முதல் மிகக் குறைவானது, அதே நேரத்தில் தேசிய கொரோனா மீட்பு விகிதம் 97.56 சதவீதமாக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் வெள்ளிக்கிழமை மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 62 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மோடி பாராட்டு
ஜனவரி மாதத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் செலுத்தப்பட்ட அதிகபட்ச தடுப்பூசி எண்ணிக்கை இதுவாகும். இதனை வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில், ' இன்றைய தடுப்பூசி எண்ணிக்கையை பாருங்கள். 1 கோடியை தாண்டுவது ஒரு முக்கியமான சாதனை. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், தடுப்பூசி போடும் பணியை வெற்றிகரமாக செய்து கொண்டிருப்பவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உலகளவில் 200 மில்லியன்
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 மில்லியனை தாண்டியுள்ளது. உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலான நாடுகள் தங்கள் மக்கள்தொகையில் பாதிக்கு முதல் தடுப்பூசி கூட கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications