இனி உலகம் முழுவதும் பறக்கலாம்.. மத்திய அரசு தந்த முக்கிய அப்டேட்.. எந்த தேதியில் இருந்து தெரியுமா.?
டெல்லி : இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான முடிவை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் எடுத்துள்ளது.
சீனாவின் வூகான் மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா உலகம் முழுவதும் அடுத்தடுத்து பரவி லட்சக்கணக்கானோரை பாதித்தது.
அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய கொரோனாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். பொருளாதார ரீதியாகவும் பலத்த சேதத்தை உலக நாடுகள் சந்தித்தன.

கடும் கட்டுப்பாடுகள்
இதையடுத்து நோய் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை உலக நாடுகள் விதித்தன. குறிப்பாக விமான நிலையங்கள் மூலம் வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாதிப்பு குறைந்தது. இதையடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. விமான பயணம் மேற்கொள்பவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது உலகம் முழுவதும் பாதிப்பு குறைந்து வருகிறது.

புதிய விதிமுறைகள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல பல்வேறு நாடுகளிலும் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. இதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை, இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என கூறியுள்ளது.

மீண்டும் விமான சேவை
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான முடிவை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் எடுத்துள்ளது. உலகம் முழுவதும் அதிகரித்த தடுப்பூசி கவரேஜை அங்கீகரித்துள்ள நிலையில் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, திட்டமிடப்பட்ட வணிக சர்வதேச பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்க இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு முடிவு
மார்ச் 27, 2022 முதல், அதாவது 2022 கோடைகால அட்டவணையின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவிற்கும் வெளியேயும் திட்டமிடப்பட்ட வணிக சர்வதேச பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமான சேவைகள் 23 மார்ச், 2020 முதல் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், ஜூலை 2020 முதல் இந்தியாவிற்கு சுமார் 40 நாடுகளுக்கும் இடையே சிறப்பு பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications