வாக்சீன் கொள்முதல் விலை .. மாநில அரசுகளை மோத விடுவது ஏன்- மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: மத்திய அரசே வாக்சின் கொள்முதல் செய்யாமல் மாநில அரசுகள் தங்களுக்குள் போட்டிபோட விடுவது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்குவது தொடர்பாக தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இருவாரங்கள் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வாக்சின் பாலிசி தொடர்பாக, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரியது. இதையடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

கிடுக்கிப்பிடி கேள்விகள்
அப்போது நீதிமன்றம் மத்திய அரசுக்கு கிடுக்கிப்பிடி கேள்விகளை முன்வைத்தது: இதுவரை மத்திய அரசு வேக்சின் தொடர்பாக தேசிய கொள்கையை சமர்ப்பிக்கவில்லை. பல்வேறு மாநில அரசுகளும் உலகளாவிய டெண்டர்கள் மூலம், வாக்சின் வாங்குகின்றன. இது மத்திய அரசின் கொள்கைதானா?

மாநிலங்கள் போட்டி
45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசியை முழுக்க மத்திய அரசு வாங்குகிறது. ஆனால் 45 வயதுக்கு கீழுள்ளோருக்கான வாக்சின்களை வாங்குவதில்லை. உற்பத்தியாளர்களிடமிருந்து 50 சதவீதத்தை மட்டும்தான் மாநில அரசு வாங்க முடிகிறது. மத்திய அரசை விட மாநில அரசுக்கு அவை அதிக விலையில் வாக்சின் விற்பனை செய்கின்றன. மாநில அரசுகள் தங்களுக்குள் வாக்சின் வாங்க போட்டிப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று, நினைக்கிறீர்களா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பணத்திற்கு ஏற்ப டோஸ் இல்லை
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, மாநிலங்கள் தங்களுக்குள் போட்டிப் போடுவதாக கூறுவது தவறானது. சில மாநிலங்கள் அதிகம் பணம் செலுத்தி, அதிக வாக்சின் பெறும் நிலைமை இல்லை என்றார்.

மாநகராட்சிகள் கூட வாங்குகிறார்கள்
ஆனால் நீதிபதிகள் விடவில்லை. மாநில அரசு, மாநகராட்சி போன்றவை தனித்தனியாக உலகளாவிய டெண்டர் விடுவதை கூட பார்க்கிறோம். இப்படி மாநகராட்சிகளும், மாநில அரசுகளும் வாக்சின் வாங்கிக் கொள்ளலாம் என்பது மத்திய அரசின் கொள்கை முடிவா என்று கேள்வி எழுப்பினர். "45 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும், மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்கிறது. ஆனால், 18-44 வயதுடையோருக்கு, மாநிலங்களுக்கு 50 சதவீதம் கிடைக்கிறது, மீதமுள்ளவை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்.

மத்திய அரசு ஏன் வாங்கவில்லை
முதல் அலையின்போது 45 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் அதிக கொரோனா இறப்பு விகிதம் இருந்தது. ஆனால், 18-44 வயதுடையோர் இரண்டாவது அலையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களை காப்பாற்ற தடுப்பூசிகளை வாங்குவதே மத்திய அரசின் நோக்கம் என்றால், ஏன் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் மத்திய அரசு தடுப்பூசி வாங்க வேண்டும்?. ஏன் ஒரே விலையை நிர்ணயிக்கவில்லை" என்று அடுக்கடுக்காக நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட பெஞ்ச் கேள்விக் கணைகளை தொடுத்தது.

வேறுபட்ட விலைகள்
"மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும், உற்பத்தியாளர்கள் வேறுபட்ட விலை நிர்ணயம் செய்ய முடியாது. மருந்துகள் மற்றும் அழகுசாதனச் சட்டத்தின் கீழ் கட்டண விகிதங்களை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு அதிகாரங்கள் உள்ளன. வெவ்வேறு விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை ஏன் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் விட வேண்டும்? " என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மத்திய அரசின் பொறுப்பு
"மாநிலங்கள் ஏன் அதிக விலையை செலுத்த வேண்டும்? முழு நாட்டிற்கும் வாக்சின் விலை நிர்ணயிக்கும் பொறுப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும்" என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி பார்த்தால், மே 1 முதல் மே 24 வரையிலான கோவிட் கேஸ்களில் கிட்டத்தட்ட 26 சதவீதம் 18-44 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்து.












Click it and Unblock the Notifications