ஜூலை 31 வரை 'ஸ்டெர்லைட் ஆலை' திறந்திருக்கலாம்.. உச்சநீதிமன்றம் அனுமதி.. வலுக்கும் எதிர்ப்புகள்!
டெல்லி: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஜூலை 31 வரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை செயல்பட தொடங்கியதில்இருந்து அங்கு இருந்து வெளியேறும் நச்சு வாயுவால் ஆலை இருக்கும் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்ட்டனர்.
அப்பகுதி நிலத்தடி நீரும் காற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெகுண்டெழுந்த பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர்.
ஆக்சிஜன் இல்லை... கர்நாடக அரசு மருத்துவமனையில் மூச்சு திணறி.. அடுத்தடுத்து 8 நோயாளிகள் பலியான சோகம்
13 பேர் உயிரிழப்பு
ஆனால் இந்த போராட்டத்தை ஒடுக்க 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாயினர். இது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து அதனை அதிரடியாக மூடியது தமிழக அரசு. இதற்கிடையே கொரோனா நோயாளிகளின் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ஆக்சிஜனுக்கு நாடு முழுவதும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்துக்கு சென்ற வேதாந்தா
இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட வேதாந்தா நிறுவனம் ''ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அதில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறோம்'' என நேராக உச்சநீதிமன்றத்துக்கு சென்றது. '' ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்கலாம்'' என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது. ஆனால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்தது.
தமிழக அரசு முடிவு
பின்னர் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்டது தமிழக அரசு. இதன்பின்னர் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் 4 மாதங்கள் ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியது. இதனை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் முழுவதும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அதனை பிரித்து மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. கண்காணிப்புக் குழுவின்கீழ் ஆலையின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஜூலை 31 வரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 31-க்கு பிறகு அப்போதைய சூழலைப் பொறுத்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Recommended Video
வலுக்கும் எதிர்ப்புகள்
இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் மனு கொடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து நாளை போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். உள்ளூர் வியாபரிகள் மற்றும் பொதுமக்கள் நாளை கருப்பு பேட்ஜ் அணிந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிப்பு தெரிவிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.