லக்கீம்பூர்.. அமைச்சர் மகனின் ஜாமீனை ரத்து செய்யாதது ஏன்?உ.பி அரசிடம் உச்சநீதிமன்றம் பரபர கேள்வி!
டெல்லி : உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்ற வழக்கில் கைதான மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யாதது ஏன் என உத்தரப்பிரதேச அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வட மாநிலங்களில் ஆண்டு கணக்கில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் ஆஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் விவசாயிகள், பத்திரிகையாளர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்.

ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன்
இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

ஜாமீனை ரத்து செய்ய பரிந்துரை
அதில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயிகள் உயிரிழந்த இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய உத்தரப்பிரதேச அரசிடம் பரிந்துரை செய்தது.

உச்சநீதிமன்றம் கேள்வி
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு புலனாய்வு குழுவின் பரிந்துரையின்படி ஆஷிஸ் மிஸ்ராவின் ஜாமீனை தள்ளுபடி செய்யாதது ஏன்? உத்தரப்பிரதேச மாநில அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
"சிறப்பு புலனாய்வுக்குழு உத்தரப் பிரதேச தலைமைச் செயலாளருக்கு அஜய் மிஸ்ராவின் ஜாமீனை ரத்துச்செய்யக்கோரி கடிதம் எழுதி இருக்கிறது என அதை கண்காணித்து வரும் நீதிபதியும் கூறியுள்ளார். இதுவரை அரசு ஜாமீனை ரத்து செய்யாதது ஏன்? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வினவினார்.

எங்களுக்கு எதுவுமே தெரியாது?
இதற்கு பதிலளித்த உத்தரப்பிரதேச அரசு தரப்பு வழக்கறிஞர், "இதுகுறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை. நான் அந்த அறிக்கையை பார்க்கவில்லை. எங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் கிடைக்கபெறவில்லை." என்றார். இதன் பின்னர் தொலைபேசி வாயிலாக உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளரை அழைத்த அவர், இதுகுறித்து வினவினார். அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் விளக்கமளித்த வழக்கறிஞர், "தலைமைச் செயலாளரும் தனக்கு சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் இருந்து எந்த பரிந்துரை கடிதமும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்." என்றார்.

திங்கள்கிழமை வழக்கு ஒத்திவைப்பு
இதனையடுத்து, சிறப்பு புலனாய்வுக்குழு கண்காணிப்பு நீதிபதி கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி அளித்த அறிக்கையின் நகலை சமர்பிக்குமாறு பதிவாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அப்போது ஆஷிஸ் மிஸ்ரா தலைமையில் ஆஜரான வழக்கறிஞர், வரும் திங்கட்கிழமை வழக்கை ஒத்திவைக்க கோரினார். அவரது கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, இந்த வழக்கு மாதக்கணக்கில் நீடித்து வருகிறது என சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications