உலகின் முதல் டி.என்.ஏ. கொரோனா தடுப்பூசி, மூக்கு வழி தடுப்பூசிகள் அறிமுகம்.. பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லி: உலகின் முதல் டி.என்.ஏ.,தடுப்பூசி இந்தியாவில் வர உள்ளது எனவும், ஓமிக்ரான் பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையான இன்று பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு உரையாற்றினார். மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறிய பிரதமர் மோடி நாட்டில் கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கொரோனாவில் சமாளிக்க தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது என தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தொடர்ந்து நாம் முன்னணியில் உள்ள நிலையில் கோவா உத்தரகண்டில் முதல் தவணை தடுப்பூசி 100% செலுத்தப்பட்டுள்ளது என்றும் , உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும், மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என கூறிய பிரதமர் மோடி, ஜனவரி 10ஆம் தேதி முதல் கூடுதல் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்றும் இவற்றைக் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கை மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். அனைத்து பகுதிகளிலும் 100% தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தேசத்தின் பொருளாதாரம் நல்ல நிலைமைக்கு திரும்பி இருக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்












Click it and Unblock the Notifications