தமிழ் வளர்க்கும் ஆணவத்தில் சமஸ்கிருதம், இந்தியை கற்கவிடாமல் தடுத்தனர்! நிர்மலா சீதாராமன் பகீர் புகார்
டெல்லி: தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு என்ற பெயரில் தமிழ் வளர்க்கும் ஆணவத்தில் எங்களை சமஸ்கிருதம், இந்தி படிக்கவிடாமல் செய்தனர். அங்கு வாழ்ந்த அனுபவத்தில் இருந்து நான் இதை சொல்கிறேன் என திமுகவை கடுமையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கி பேசி கனிமொழி எம்பிக்கு பதிலடி கொடுத்தார்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பேச வைக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2வது நாள் விவாதம் நடந்தது.

இந்த விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி பேசினார். அப்போது அவர் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி கனிமொழி எம்பி பேசியதாவது:
தமிழகத்தின் வரலாறு பிரதமர் மோடிக்கு தெரியுமா? நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து அது சோழர் பரம்பரையில் இருந்து வந்ததாக சொன்னீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா? எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள். ஏனென்றால் அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது'' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் கனிமொழியின் இந்தி திணிப்பு குறித்த பேச்சுக்கு இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதத்தை கற்று கொள்ள விடாமல் ஒரு வகை திணிப்பு இருந்து வந்தது. நாங்கள் இந்தி, சமஸ்கிருதம் கற்று கொள்ள முடியாத வகையில் கொள்கை வாயிலான திணிப்பு இருந்தது.
தமிழை வளர்க்க உங்களுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கிறதோ? அந்த அளவுக்கு இந்தி, சமஸ்கிருதத்தை படிக்க விடாமல் தடுக்கும் அதிகாரம் உங்களிடம் இல்லை. இருந்தாலும் இந்தியை வளர்க்ககூடாது. தமிழை தான் வளர்க்க வேண்டும் என்ற ஆணவத்துடன் எங்கள் யாரையும் இந்தி, சமஸ்கிருதத்தை படிக்க விடவில்லை.
இதனை நான் வெறுமேன சொல்லி விடவில்லை. அங்கு வாழ்ந்த அனுபவத்தில் இருந்து நான் கூறுகிறேன். இவ்வாறு தமிழ்நாட்டில் தனிப்பட்ட நபர்கள் இந்தி, சமஸ்கிருதம் படிப்பதை தடுத்தனர்'' என கோபத்தை கொப்பளித்தார். நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் இப்படி அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதன்மூலம் அவர் திமுகவை விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications