இதுதான் ”56 இன்ச்” தண்ணீர் இல்லாமல் பாகிஸ்தானியர்கள் சாகப்போறாங்க.. மோடியை புகழ்ந்த பாஜக எம்பி
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதற்கிடையே பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு மோடியை பாராட்டியுள்ள பாஜக எம்பி, இதுதான் "56 இன்ச்" என்றும், தண்ணீர் இல்லாமல் பாகிஸ்தானியர்கள் சாகப்போறாங்க என்றும் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசாரன் புல்மேடு சுற்றுலா தலத்தில் நேற்று முன் தினம் திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூடில் அப்பாவி மக்கள் 26 பேர் பலியாகினர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 12 பேர் காயமடைந்தர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

பிரதமர் மோடி நடவடிக்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து போராடி வருகிறார்கள். அதேபோன்று உயிரிழந்த அப்பாவி மக்களுக்காக பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பஹல்காம் கொடூர தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் 'தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.
'தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு நம் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். எனினும் இந்த அமைப்புக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் கூறியது. பயங்கரவாத சம்பவத்துக்கு பாரதம் ஒரு போதும் துணை போகாது என்றும், குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். சம்பவ இடங்களில் ஆய்வு செய்த அமித்ஷா இவ்வாறு கூறினார்.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிராக முதற்கட்டமாக சில முக்கிய முடிவுகளை இந்தியா எடுத்துள்ளது. சவுதி அரேபியா பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியும் அந்த பயணத்தை பாதியில் முடித்துவிட்டு அவசர அவசரமாக இந்தியா திரும்பினார், பின்பு மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தானியர்கள் சாகப்போகிறார்கள்
இந்த நிலையில் தான், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே 1960 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டியுள்ள பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், "தண்ணீர் இல்லாமல் பாகிஸ்தானியர்கள் சாகப்போகிறார்கள். இது 56 இன்ச் மார்பு. 1960 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெறுவதற்காக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நேரு செய்தார். தற்போது இந்த ஒப்பந்தத்தை மோடி நிறுத்தியுள்ளார். நாங்கள் பாஜக தொண்டர்கள். அவர்களை சித்ரவதை செய்து நாங்கள் கொல்வோம்" என்று தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த நாள் அன்று நாடு முழுவதில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பஹல்காமில் இருந்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல் காரணமாக அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு அங்குள்ள மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததையும் பார்க்க முடிந்தது. தண்ணீர், உணவு கொடுத்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.












Click it and Unblock the Notifications