தமிழக ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக் காலம் நிறைவு.. கண்ணீர் மல்க விடை பெற்றார் மைத்ரேயன்
டெல்லி: தமிழக ராஜ்யசபா எம்பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து மாநிலங்களையில் கண்ணீர் மல்க பேசிய மைத்ரேயன் விடை பெற்றார்.
நாடாளுமன்றத்தின் மேலவை எனப்படும் ராஜ்யசபாவுக்கு ஒவ்வொரு மாநிலங்களிலிருந்து அந்த மாநிலத்தில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்தந்த மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடியும் போது இந்த தேர்தல் நடைபெறும்.

மாநிலங்களவை
அதன்படி தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜூனன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி ராஜா, திமுக சார்பில் கனிமொழி ஆகியோர் 2013-ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டனர்.

தேர்தல் ஆணையம்
இவர்களது பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடையும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-இல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

போட்டியின்றி தேர்வு
இதில் மொத்தம் 6 இடங்களுக்கு அதிமுக சார்பில் சந்திரசேகரன், முகம்மது ஜான், பாமகவின் அன்புமணியும், திமுக சார்பில் வில்சன், சண்முகம், வைகோவும் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால் இவர்களில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

பதவி இன்றுடன் முடிவு
இதையடுத்து தலைமை செயலகத்துக்கு சென்ற இந்த 6 பேரும் சட்டசபை செயலாளரிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை பெற்றனர். இந்த நிலையில் ஏற்கெனவே இருந்த தமிழக மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது.

சமாதானம்
இதையடுத்து மாநிலங்களவையில் இன்று பதவிக்காலம் முடிவடையும் எம்பிக்கள் பேசினர். அப்போது துக்கம் தாளாமல் எம்பி மைத்ரேயன் கண்ணீர் மல்க பேசினார். அவரை மற்ற எம்பிக்கள் சமாதானம் செய்தனர்.












Click it and Unblock the Notifications