காவல்துறை, நாடாளுமன்ற நிலைக்குழு.. மூன்று பக்கம் நெருக்கடியில் ட்விட்டர்.. பெரும் சட்டச் சிக்கல்
டெல்லி: இந்தியாவில் முத்தரப்பு சட்டத் தாக்குதலில் சிக்கியுள்ளது ட்விட்டர் நிர்வாகம்.
Recommended Video
இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களை ஏற்க மறத்துள்ளது டுவிட்டர் நிர்வாகம். இந்த நிலையில் அதற்கு வழங்கப்பட்ட சட்டப் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில்தான், அடுத்தடுத்து பல சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது ட்விட்டர்.
"மத அமைதியின்மையைத் தூண்டும்" நோக்கத்துடன் உத்தரப் பிரதேச மாநிலம் லோனியில் ஒரு முதியவர் தாக்கப்படுவது குறித்த வீடியோவை டுவிட்டர் பரப்பியதாக காஜியாபாத் காவல்துறை ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எம்.டி லோனி காவல் நிலையத்திற்கு டுவிட்டர் நிர்வாக இயக்குனர் 7 நாட்களுக்குள் சென்று தனது வாக்குமூலத்தை அவர் பதிவு செய்ய வேண்டும்.
டுவிட்டரில் சிலரால் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோவில், வயதான முஸ்லீம் ஒருவரை நான்கு பேர் தாக்கி, தாடியை வெட்டி "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷம் எழுப்பக் கூறியதாக காட்சிகள் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஜூன் 5 ம் தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக காஜியாபாத் போலீசார் ஏற்கனவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தனர்.
ட்விட்டர் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா, எழுத்தாளர்கள் முகமது ஜுபைர் மற்றும் ராணா அய்யூப், மற்றும் மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் சபா நக்வி ஆகியோருக்கு எதிராக உத்தரபிரதேச காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில், டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு, மே 31 அன்று பெங்களூர் சென்று, மத்திய அரசுக்கு எதிராகப் பரப்பப்பட்டதாகக் கூறப்படும், டூல் கிட் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது. போலீசார் முன்னதாக டெல்லியில் உள்ள ட்விட்டர் அலுவலகத்திற்குச் சென்று காங்கிரஸின் சமூக ஊடகத் தலைவர் ரோஹன் குப்தா மற்றும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் எம்வி ராஜீவ் கவுடா ஆகியோருக்கு சம்மன் அனுப்பினர்.
இதற்கிடையில், தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் கூடுகிறது. அங்கு டிவிட்டர் அதிகாரிகள் குழு ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். புதிய ஐடி விதிகளை டிவிட்டர் ஏற்க மறுத்தது குறித்து அப்போது கேள்விகள் முன் வைக்கப்படும்.
உத்தர பிரதேசம்,டெல்லி காவல்துறை மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு என முத்தரப்பு சட்டத் தாக்குதலில் சிக்கியுள்ளது ட்விட்டர்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி 140 கோடி இந்தியர்களின் குரலை அடக்க விரும்புவதாகவும், அவருக்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிராக யார் விமர்சனம் செய்தாலும் அவர்களால் ஏற்க முடியவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு எதிரான நடவடிக்கை, பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.