இறை தண்டனையில் இருந்து நீங்கள் தப்ப முடியாது.. மோடி அரசுக்கு அதிமுக எம்.பி கொடுத்த சாபம்
Recommended Video
டெல்லி: முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றினால், வருந்தியே ஆக வேண்டும் என்று, மத்திய அரசுக்கு, அதிமுக எம்.பி. அன்வர் ராஜா சாபம் விடுத்தார்.
லோக்சபாவில் நேற்று முத்தலாக் சட்ட மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், முத்தலாக் மசோதாவை இதே நிலையில் நிறைவேற்ற ஒப்புதல் வழங்க முடியாது என்றார்.
இஸ்லாமிய, விவாகரத்து முறை என்பது, பகுத்தறிவுக்கு உட்பட்டதாக உள்ளது என்று கேரள நீதிபதி கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்பையும், அவர் மேற்கோள் காட்டினார்.
இறைவனின் சட்டம்
ஷரியத் சட்டம் மனிதர் உருவாக்கியது அல்ல என்றும் இறைவனால் அனுப்பப்பட்டது என்றும் குறிப்பிட்ட அன்வர் ராஜா, முத்தலாக் சட்டம் என்பது, இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல, இறைவனுக்கே எதிரானது. முத்தலாக் சட்டம் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது என்ற அன்வர் ராஜா. மனிதன் ஒரு சட்டத்தை வகுத்தால் அது காலத்துக்கு ஏற்ப மாறும். திருத்தங்களுக்கு உட்பட்டதாக இருக்கும். காரல் மார்க்ஸ், லெனின் போன்றவர்கள் கருத்துக்கு கூட மாற்றுக் கருத்து உள்ளது.
மனிதன் மாற்றி பேசுவான்
இறைவன் இல்லை என்று ஒரு கவிஞன் சொன்னார். ஆனால் அதே கவிஞன் பிறகு இறைவன் உண்டு என்று சொன்னார். மனிதன் சொன்னால், எதையுமே, மாற்றி மாற்றி சொல்வான். இறைவன் சொன்னதால்தான் இது மாறாமல் ஒரே சட்டமாக உள்ளது.
வருந்த வேண்டும்
எம்ஜிஆர் பாடல் ஒன்றில், தப்பு செய்தவன் வருந்தி ஆகணும் என்று கூறியுள்ளார். எனவே, நீங்கள் வேண்டுமென்றே இதை செய்தீர்களானால், நீங்கள் வருந்திதான் தீர வேண்டும். வேறு வழியே இல்லை. அதுதான் உங்கள் ஆட்சியில் நடைபெற்று வருகிறது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் கிராமத்திலும், ஜிஎஸ்டி வரி விதிப்பால் நகர்ப்புறத்திலும் உங்கள் செல்வாக்கை இழந்தீர்கள்.
இறை தண்டனை
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பண மதிப்பு வீழ்ச்சி போன்றவற்றால் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையை இழந்தீர்கள். 5 மாநில தேர்தலில் தோற்றீர்கள். கெடுவான் கேடு நினைப்பான் என்பது உங்களுக்கு பொருத்தமானது. நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டுவரவில்லை. இதை ஆண்டவனுக்கு எதிராக கொண்டுவருகிறீர்கள். எனவே இறை தண்டனையில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது, என்று கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அன்வர் ராஜா ஆவேசமாக பேசினார்.