போராட்டத்தை முறியடிக்க.. விவசாய சங்க தலைவர்கள் டுவிட்டர் அக்கவுண்ட் திடீர் முடக்கம்!
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரது ட்விட்டர் கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்களை அடிமையாக்கி விடும் என்பது விவசாயிகளின் அச்சம். எனவே, அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சுமார் 20 நாட்களாக டெல்லியின் புறநகர் பகுதிகளில், பல்வேறு எல்லைப்புறங்களில் விவசாயிகள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியரசு தினத்தன்று மிகப்பெரிய டிராக்டர் பேரணியை நடத்தி உலகம் முழுக்க கவனத்தை ஈர்த்தனர். அந்த பேரணியின்போது சில பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.
அப்போது, சில பகுதிகளில் போலீஸ் மற்றும் விவசாயிகள் மோதிக்கொண்டனர். இந்த நிலையில்தான், விவசாயிகளின் போராட்டம் வீரியம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்கிறார்கள் களத்தில் உள்ளவர்கள்.
போராட்டம் உத்தரப்பிரதேச மாநில எல்லை வரை பரவிக் கொண்டிருக்கிறது. அங்கு முன்பைவிட அதிக அளவில் போராட்டம் வலுப்பெற்று உள்ளது.
இந்த நிலையில் விவசாய சங்கங்களின் முக்கிய தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கியுள்ளது.
@Kisanektamorcha, @Bkuektaugrahan ஆகியோர், கணக்கு முடக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள். இவர்களை ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள்.
சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாக போராட்டம் பற்றிய தகவல்களை அல்லது போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பதிவுகளை முடக்க டுவிட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.