பொக்ரான் அணுகுண்டு சோதனையை எதிர்த்து.. பாகிஸ்தானுக்கு பீரங்கி கொடுத்து.. "உக்ரைன்.." ஒரு பிளாஷ்பேக்!
டெல்லி: ‛‛பொக்ரான் அணுகுண்டு சோதனையை எதிர்த்தது, காஷ்மீர் விவகாரத்தில் கண்டனம், பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் கொடுத்தது'' உள்ளிட்ட "காரணங்களாலும்தான்" உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் கைகோர்ப்பதே நல்லது என்ற முடிவை இந்தியா எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா 3வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால் போரை நிறுத்துவதாக ரஷ்யா கூறியுள்ளது. இதுதொடர்பாக உக்ரைன் இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே ரஷ்யாவுடன் நல்லுறவை பேணும் இந்தியா இதில் தலையிட வேண்டும். ரஷ்யாவின் போர் தொடுக்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி பிரதமர் நரேந்திரமோடி, ரஷ்யா அதிபர் விலாடிமிர் புதினுடன் பேச வேண்டும் என உக்ரைன் தூதர் இகார் பொலிகா உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
நாட்டை விட்டு தப்பிச்சுடுங்க! உக்ரைன் அதிபருக்கு போன அமெரிக்க மெசேஜ்.. பதிலாக வந்த உருக்கமான ரிப்ளே!
இந்தியா நடுநிலை
இதையடுத்து ரஷ்யா அதிபர் விலாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோதும் அதுவே எதிரொலித்தது. அதாவது, ‛‛ரஷ்யா-உக்ரைன் இடையேயான விவகாரத்தில் இந்தியா நடுநிலைமையை எடுத்துள்ளது. போரை நிறுத்துங்கள். பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம்'' என வலியுறுத்தினார். இதன்மூலம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்திருப்பது உறுதியானது.
தீர்மானம் தோல்வி
மேலும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா பங்கேற்வில்லை. வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய ரஷ்யா அந்த தீர்மானத்தை முறியடித்தது. இதனால் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியும் அடைந்தது. இந்த விஷயத்தில் சீனா, பாகிஸ்தான் போன்று இந்தியாவும் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதை காட்டுகிறது என மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.
காரணம் என்ன
இந்த விவகாரத்தில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்னவென்று வரலாற்றை திரும்பி பார்த்தால் நன்றாக புரியும். அதாவது உக்ரைன், இந்தியாவுடன் எப்போதும் நல்லுறவை வைத்தது இல்லை. தேவையில்லா விஷயங்களுக்கும் மூக்கை நுழைத்து கண்டனம் தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான உக்ரைனின் செயல்பாட்டுக்கு பொக்ரான் அணு சோதனை, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு கண்டனம், பாகிஸ்தானுக்கு பீரங்கி கொடுத்து உதவியது என பல்வேறு விஷயங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
அணுகுண்டு சோதனைக்கு எதிர்ப்பு
இந்தியாவில் 1998ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தார். ஆபரேஷன் சக்தி என்ற பெயரில் ராஜஸ்தானின் பொக்ரானில் அணுகுண்டு சோதனையை இந்தியா மேற்கொண்டது. இதை உக்ரைன் கடுமையாக எதிர்த்தது. மேலும் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதித்தது. இதுமட்டுமின்றி உக்ரைன் உள்பட 25 நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு உக்ரைன் ஆதரவு தெரிவித்தது.
இந்திய வளர்ச்சி பாதிப்பு
இதையடுத்து அணுகுண்டு சோதனைகளை இந்தியா தவிர்க்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கோரியதோடு, ஒருங்கிணைந்த அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவை கட்டாயப்படுத்தியது. அத்துடன் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள் குறித்த ஆராய்ச்சி நடவடிக்கைகளை நிறுத்துமாறு இந்தியாவுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்கள் இந்தியாவுக்கு கைக்கொடுத்தன. ஆயினும்கூட, உக்ரைன் மற்றும் பிற நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் இந்தியாவின் வளர்ச்சியை பாதித்தது.
பாகிஸ்தானுக்கு ஆயுதம்
மேலும் இந்தியா ரஷ்யாவில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. ஆனால் உக்ரைன் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது. ஸ்டாக்கோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவன அறிக்கைப்படி பாகிஸ்தானுக்கு 1.6 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு, உக்ரைன் வழங்கியுள்ளது. ஆயுத கொள்முதலில் உக்ரைனின் பெரிய வாடிக்கையாளராக பாகிஸ்தானை கருதலாம். இதற்கிடையே சீனா-பாகிஸ்தான் உறவு வலுவான நிலையில் உக்ரைன் நாட்டில் இருந்து பாகிஸ்தான் இறக்குமதி செய்யும் ஆயுதத்தின் அளவு சற்று குறைந்துள்ளது. மேலும் காஷ்மீர் விவகாரத்தில் உக்ரைன் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து இருந்தது.
இந்தியாவுக்கு அழுத்தம்
அணு ஆயுத சோதனை, இந்தியாவுக்கான பயங்கரவாத அச்சுறுத்தலின்போதும் இந்தியாவுடன் உக்ரைன் நிற்கவில்லை. ஆனால் இன்று அதே உக்ரைன் இந்தப் போரில் இந்தியா உதவ வேண்டும் என்று விரும்புகிறது. இது தவிர ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
வாய்பேசாத நாடுகள்
மேலும் உக்ரைன் மீதான போரில் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும், இந்தியா தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களின்போது இந்தியாவுக்கு இந்த நாடுகள் எந்த ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. கொஞ்சம் யோசித்து பார்த்தால் காஷ்மீர் விஷயம், லடாக் எல்லையில், கல்வானில் சீனாவின் திட்டமிட்ட தாக்குதலின்போது, இந்த நாடுகள் வாய்பேசாமல் இருந்தது நன்கு புரியும்.
இந்தியா கவனம்
சர்வதேச உறவுகளை பொறுத்தமட்டில் நிரந்தர நண்பர்களாகவும், எதிரிகளாகவும் ஒவ்வொரு நாடுகள் இருக்க முடியாது. அதேநேரத்தில் உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டாம் என்பதே ரஷ்யாவின் விருப்பமாக உள்ளது. இதனால் தான் அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் வலியுறுத்தியும் இந்தியா ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. மேலும் ரஷ்யாவுடன் உள்ள நல்லுறவுக்கு பங்கம் வரக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.