பாஜகவிற்கு அடுத்த அடி.. லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை.. சுஷ்மாவை போலவே உமா பாரதியும் அறிவிப்பு
Recommended Video
டெல்லி: 2019ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் உமா பாரதி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, மற்றொரு சீனியர் மத்திய பெண் அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துவிட்ட நிலையில், உமா பாரதியும் இவ்வாறு அறிவித்துள்ளது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1989ம் ஆண்டு, மத்திய பிரதேச மாநிலம், கஜுரஹோ லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியான உமா பாரதி, 1991, 1996 மற்றும் 1998ம் ஆண்டுகளிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்று அசத்தினார்.
அத்வானியுடன், இணைந்து ராம ஜென்ம பூமி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டபோது, தீவிர இந்துத்துவாவாதியான, உமா பாரதி தேசிய அளவில் முக்கிய தலைவராக மாறினார்.
நரேந்திர மோடி அரசில், 2017 செப்டம்பர் 1ம் தேதிவரை நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த உமா பாரதி, பிறகு குடிநீர் மற்றும் கழிவகற்றல் துறைக்கான அமைச்சரானார்.
இந்த நிலையில், லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், ராம ஜென்ம பூமிக்காக தனது போராட்டம் தொடரும் என்றும் இன்று அறிவித்துள்ளார் உமா பாரதி.
சுஷ்மா சுவராஜ் மற்றும் உமா பாரதி ஆகிய இருவரும்தான், மிக சீனியர் பெண் அமைச்சர்களாகும். இருவருமே அடுத்த லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்து விட்டனர்.
சுஷ்மா சுவராஜ் மீண்டும் தனது விதிஷா தொகுதியில் வெற்றி பெற முடியாது என்பதை தெரிந்து கொண்டுதான், உடல்நலத்தை காரணம் காட்டி போட்டியிட மறுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.