சோனியாவை தலைவராக கொண்ட ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமத்தை அதிரடியாக ரத்து செய்த மத்திய அரசு!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை தலைவராக கொண்ட ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை மத்திய பாஜக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் 1991-ம் ஆண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ராஜீவ் அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தி, அறங்காவலர்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், லோக்சபா எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராஜீவ் காந்தி அறக்கட்டளையானது, அறிவியல்- தொழில்நுட்பம், சுகாதாரம், பெண்கள்- குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையானது 2010-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு நிதி திரட்டவும் முடிவு செய்தது.
இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, 2 ஆண்டுகளுக்கு முன்னர் சோனியா காந்தி குடும்பத்தினர் நிர்வகித்து வரும் 3 அறக்கட்டளைகள் மீது விசாரணை நடத்த குழு அமைத்தது. இன்னொரு பக்கம் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இதேபோல் விசாரணையை நடத்தினர். ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ்காந்தி டிரஸ்ட், இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து இந்த அறக்கட்டளைகள் நிதி உதவி பெற்றதில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதா? அறக்கட்டளை சார் உரிமங்களுக்கான விதிகள் மீறப்பட்டுள்ளனவா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டது.
சோனியா காந்தி குடும்பத்தின் அறக்கட்டளைகளுக்கு எதிரான மத்திய அரசின் விசாரணைக் கமிட்டியில், சிபிஐ, உள்துறை, நிதித்துறை அமைச்சக அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர். இந்த 3 அறக்கட்டளைகளும் வெளிநாட்டு நிதி உதவியைப் பெற்று ஏதேனும் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதா? அது தொடர்பாக போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாகவும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கான வெளிநாட்டு நிதி உதவி பெற்றதில் விதிகள் மீறப்பட்டுள்ளன; முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என கூறி அதன் உரிமத்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்திருக்கிறது. இது காங்கிரஸ் தரப்பை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications