சிகரெட் விலை உயர வாய்ப்பு.. புகைப்பிடிப்பவர்களுக்கு ஷாக் கொடுத்த நிர்மலா சீதாராமன்.. பட்ஜெட் விபரம்
சிகரெட் மீதான தேசிய பேரிடர் குழுவுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
டெல்லி: இந்தியாவில் சிகரெட்டுகள் மீதான தேசிய பேரிடர் வரியை 10 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்தி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால் விரைவில் சிகரெட்டுகள் மீதான விலை என்பது அதிகரிக்க உள்ளது.
2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் வாசிக்க தொடங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த பட்ஜெட்டில் புகையிலை பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்படும் எனவும், இதனால் அதன் மீதான விலை உயரும் எனவும் தகவல்கள் முன்கூட்டியே வெளியாகின. இதற்கு முக்கிய காரணம் என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கான வரியில் எந்த மாற்றமும் செய்யாதது தான் என நிபுணர்கள் கணித்து இருந்தனர்.

சிகரெட் வரி உயர்வு
இந்நிலையில் தான் சிகரெட் மீதான வரியை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இப்பொருட்களின் மீதான தேசிய பேரிடர் வரி (National Calamity Contingent Duty)விதிக்கும் உரிமை மத்திய அரசிடம் உள்ளது. இந்நிலையில் தான் தேசிய பேரிடர் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது சிகரெட் மீது விதிக்கப்படும் மொத்த வரியில் தேசிய பேரிடர் வரியின் பங்கு மட்டுமே 10 சதவீதமாக இருந்தது. இந்த வரி தான் தற்போது 16 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிகரெட் விலை உயர்வு
இந்த வரியை ஐடிசி உள்ளிட்ட புகையிலை தயாரிப்பு நிறுவனங்கள் செலுத்துகின்றன. தற்போது அந்த நிறுவனங்களுக்கு கூடுதல் வரிச்சுமை ஏற்படுகிறது. இந்நிலையில் தான் சிகரெட் விலை உயரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு என்பது விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

வரவேற்பு ஏன்?
இந்நிலையில் தான் தற்போதைய இந்த நடவடிக்கை என்பது நாட்டில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க உதவும். இந்தியா வரும் 2025ம் ஆண்டில் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்து இந்தியா செயல்பட்டு வரும் நிலையில் மக்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். இந்நிலையில் தான் தற்போதைய இந்த வரி உயர்வை பலரும் வரவேற்றுள்ளனர்.

27 கோடி பேர் புகையிலை பயன்பாடு
மேலும் உலகளாவிய வயதுவந்தோர் புகையிலை சர்வே இந்தியா 2016-2017 ம் ஆண்டு நிலவரப்படி 15 வயது முதல் அதற்கு மேலான வயதில் உள்ளவர்களில் 27 கோடி பேர் ஏதேனும் ஒருவகையில் புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் புகையிலை பொருட்கள் பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்திலும், புகையிலை பொருட்கள் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. தற்போதைய நடவடிக்கை என்பது சிகரெட் விலை உயர்வால் அதனை நாடி செல்வோரின் எண்ணிக்கை குறையலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications