இஸ்ரோவின் மாபெரும் திட்டம் ககன்யான்.. எப்போது நடக்கும்? தாமதம் ஏன்? மத்திய அமைச்சர் முக்கிய தகவல்
டெல்லி: இஸ்ரோவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டமான ககன்யான் கொரோனா பரவல் காரணமாகத் தாமதமாகியுள்ள நிலையில், அத்திட்டம் எப்போது நடக்கும் என்பது குறித்து மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
Recommended Video
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. குறைந்த செலவில் பல சிக்கலான விண்வெளி சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் இஸ்ரோ கில்லியாகவே உள்ளது.
இதனால் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் கூட தங்கள் நாட்டின் விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்ப இந்தியாவையே நாடுகின்றன.

ககன்யான் திட்டம்
இந்தச் சூழலில் அடுத்தகட்டமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு இஸ்ரோ முழு வீச்சில் தயாராகி வருகிறது. சர்வதேச அளவில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீன ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் விரைவில் இடம் பெறவுள்ளது. இந்த ககன்யான் திட்டத்தில் ஜி.எஸ்.எல்.வி. மார்க் - 3 ராக்கெட் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்புவார்கள்.

தாமதம்
இத்திட்டத்திற்காக இந்திய விமானப் படையில் இருந்து விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விண்வெளி பயணத்திற்குத் தயாராகும் வகையில் அவர்கள் ரஷ்யாவுக்குச் சென்று சிறப்புப் பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சிக்காக இந்தியாவும் ரஷ்யாவும் கடந்த 2019 ஜூன் 17ஆம் தேதி சிறப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கொரோனா காரணமாக ககன்யான் பணிகள் சற்று தாமதமானது. இந்நிலையில் ககன்யான் திட்டம் எப்போது நடக்கும் என்பது மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

மத்திய அமைச்சர் பேச்சு
தலைநகர் டெல்லியில் இந்தியத் தொழில் வர்த்தக சபை சார்பில் விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய அறிவியல் மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், "முதலில் அடுத்தாண்டு இந்த ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்த நாங்கள் முடிவு செய்திருந்தோம். இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் இதைச் செயல்படுத்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனாவால் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதற்குச் சாத்தியமில்லை.

எப்போது நடக்கும்
ஆனால் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். இதை நான் உறுதியாக நம்புகிறேன். 2015-16ஆம் ஆண்டுகளில் இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் விண்வெளி தொழில்நுட்பத்தை எங்குப் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்து கொள்ள நமக்கு உதவியது. பேரிடர் மேலாண்மை, தொடங்கி பல்வேறு துறைகளிலும் விண்வெளி தொழில்நுட்பத்தின் பங்கு நிச்சயம் இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் ரஷ்யா
இந்த திட்டத்தில் விண்வெளி வீரர்களின் spacesuits எனப்படும் சிறப்பு உடைகள் ரஷ்யாவில் தான் தைக்கப்படுகின்றன, அதற்கான அளவுகளைக் கொடுக்க அவர்கள் மீண்டும் மாஸ்கோவிற்கு செல்லவுள்ளனர் கடந்த ஆண்டு இத்திட்டத்திற்கா ரஷ்யா சென்று இந்திய விமானிகள் பயிற்சி பெற்ற நிலையில், இந்த spacesuits வடிமைகைக்க மீண்டும் ரஷ்யா செல்வதாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மட்டும் எதிர்பார்த்தபடி வெற்றி பெற்றால், அது இஸ்ரோவுக்கு மாபெரும் மகுடமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications