ஜனநாயகமா.. 2000 கோடி ரூபாய் சொத்தை பாதுகாக்கனும், அதற்குத்தான் காங்கிரஸ் போராட்டம்- விளாசிய ஸ்மிருதி
டெல்லி : காங்கிரஸ் கட்சியினர் ஜனநாயகத்தை காக்க போராட்டம் நடத்தவில்லை எனவும் காந்தி குடும்பத்தின் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பாதுகாக்கவே டெல்லியில் போராட்டம் நடத்தப்படுகிறது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆஜராக அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதைனையடுத்து அவர் இன்று விசாரணைக்கு ஆஜராவார் என தகவல்கள் வெளியானது.
இதற்கிடையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று சுமார் 11.25 மணியளவில் விசாரணைக்காக ஆஜரானார்.

காங்கிரஸ் போராட்டம்
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சித் தரப்பில் அமைதி வழிப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளதோடு, டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ராகுல் காந்தி மீது அரசியல் கால்புணர்ச்சியுடன் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், வேண்டுமென்றே அவர் வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் புகார்
இந்த வழக்கு 2015ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது அரசியல் காரணங்களுக்காக மீண்டும் விசாரணை நடைபெற்று வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.
இதன் காரணமாக டெல்லி போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்புகளை அமைத்துள்ளனர். ராகுல் காந்தியின் இல்லத்திற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக விமர்சனம்
காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு முழக்கமிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை மத்தியில் ஆளும் பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

ஸ்மிருதி இரானி கருத்து
காங்கிரஸ் கட்சியின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி,"விசாரணை அமைப்புக்கு அழுத்தம் தரும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் இன்று பேரணி நடத்தியுள்ளனர். காந்தி குடும்ப ஊழல் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதனால், காந்தி குடும்பத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சியாகவே இந்தப் பேரணியை நடத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை காப்பாற்ற போராட்டம் நடத்தவில்லை. காந்தி குடும்பத்தின் ரூ.2,000 கோடி சொத்துக்களை பாதுகாக்கவே டெல்லியில் போராட்டம் நடத்துகிறது. காங்கிரஸ் கட்சிக்காக நிதி கொடுத்தவர்களுக்கு அந்த நிதி பொது சேவைக்காக அல்ல ஒரு குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications