“நீட் தேர்வு புனித தன்மையை இன்னும் இழந்துவிடவில்லை..” ராகுல் விமர்சனத்திற்கு மத்திய அமைச்சர் விளக்கம்
டெல்லி: பணமிருந்தால் நீட் தேர்வு முடிவுகளை யாராலும் விலைக்கு வாங்கிவிட முடியும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்த நிலையில், இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.
இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று மக்களவையில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து ராகல் காந்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
"இந்தியாவின் தேர்வு முறைகளிலேயே பெரிய பிரச்சனை இருப்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இந்திய தேர்வு முறையே மோசடி என்று பலர் நம்புகின்றனர் . பணக்காரராக இருந்தால் தேர்வு முடிவுகளை சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று லட்சக்கணக்கானோர் நம்புகின்றனர். ஒன்றிய கல்வி அமைச்சர் தன்னை தவிர மற்ற அனைவரையும் பொறுப்பாளியாக்க பார்க்கிறார்" என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார். அதில், "7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வினாத்தாள் கசிவு குறித்து தற்போது நீதிமன்றத்தில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. பாட்னாவில் இருக்கும் ஒரே ஒரு மையத்தில் மட்டுமே வினாத்தாள் கசிவு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணையும் நடைபெறுகிறது. அனைத்து இடங்களிலும் முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது தவறு.
இந்திய தேர்வு முறை இன்னும் தனது புனிதத்தை இழந்து விடவில்லை. சில மனித தவறுகளே குழப்பத்திற்கு காரணம். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த குளறுபடிகள் போல் இப்போது எதுவும் நடைபெறவில்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications