குட்டி பெட்ஷீட்.. 7 தெருநாய்களோடு தூக்கம்.. இந்த மனசுதான் சார் கடவுள்ங்கறது!
ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா டிவிட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் இதயங்களைப் பெற்று வருகிறது.
டெல்லி: வீடில்லாத ஒரு நபரின் இரக்க குணத்தை பிரதிபலிப்பது போல் ஒரு புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இயந்தரமயமாகிவிட்ட உலகில் பெரும்பாலான மனிதர்களுக்கு தங்களுக்குத் தாங்கள் இரக்கப்படவே நேரமில்லாமல் போய்விட்டது. தங்கள் உடலை வருத்திக் கொண்டு, பணத்தைத் தேடி ஓடும் வாழ்க்கையில், தங்களைச் சுற்றி நடக்கும் நல்ல விசயங்களைப் பார்க்கக்கூட அவர்களுக்கு நேரமிருப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு சமூகவலைதளம் ஒரு வரப்பிரசாதம்தான்.
மனிதநேயம் இன்னமும் மரித்துவிடவில்லை என்பது மாதிரியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்றன. இப்போதும் அப்படித்தான் வீடில்லாத ஒரு நபரின் நல்ல உள்ளத்தை வெளிக்காட்டும் வகையில் ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
டிவிட்டரில் பகிர்வு
இந்த புகைப்படத்தை ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் தான் வசிப்பதற்கே வீடில்லாத ஒரு நபர், தன்னிடம் உள்ள சிறிய பெட்ஷீட் ஒன்றில், தெருவோரம் படுத்திருக்கிறார். அவரை இடித்துக் கொண்டு அந்த பெட்ஷீட்டில் ஏழு தெருநாய்களும் படுத்திருக்கின்றன. அவர்களோடு ஒரு பூனையும் உட்கார்ந்திருக்கிறது.
குட்டி பெட்ஷீட்
சொல்லப் போனால் அந்தப் பெட்ஷீட்டின் ஒரு ஓரத்தில் சமாளித்துக் கொண்டு அந்த மனிதர் படுத்திருக்கிறார். மீதமுள்ள முக்கால்வாசி இடத்தையும் அந்த வாயில்லாத ஜீவன்கள்தான் ஆக்கிரமித்துள்ளன. அவர் நினைத்திருந்தால் அந்த நாய்களையும், பூனையையும் விரட்டி இருக்கலாம். ஆனால் அவரின் சம்மதத்துடனேயே அவை அங்கேயே படுத்திருப்பது புகைப்படத்தில் நன்றாகத் தெரிகிறது.
24 கேரட் தங்கம்
இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள சுஷாந்த் நந்தா, கூடவே, 'இந்த பெரிய உலகத்திற்கு இடமளிக்கும் அளவுக்கு இதயம் பெரிதாக இருக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த மற்றவர்களும் இதனையே வழிமொழிந்துள்ளனர். '24 கேரட் சுத்தத் தங்கம்', 'இந்த மனசுதான் சார் கடவுள்..' என ஒவ்வொருவரும் அந்த வீடில்லாத நபரை பாராட்டி கமெண்ட் போட்டு வருகின்றனர்.
குவியும் பாராட்டு
இந்தப் புகைப்படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் மூடப்பட்ட கடைக்கு முன்பு எடுக்கப்பட்டிருப்பதால், இது காலையில் எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. 'பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை.. மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை..' என்ற பாடல் வரிகள்தான் இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.