உன்னோவ் பாலியல் வழக்கு.. பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கருக்கு இடைக்கால ஜாமீன் கொடுத்த கோர்ட்
டெல்லி: நாட்டையே அதிர வைத்த உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றவாளியான பாஜக முன்னாள் எ.எல்.ஏ குல்தீப் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது மகள் திருமணத்தில் பங்கேற்க குல்தீப் செங்கர் இடைக்கால ஜாமீன் கோரியிருந்தார். இதையடுத்து 15 நாட்கள் ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்த குல்தீப் செங்கர் மீது கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் புகார் எழுந்தது.
உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, குல்தீப் சிங் செங்கார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார்
பாதிக்கப்பட்ட சிறுமியே இந்த புகாரை தொடுத்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் அதிர்ச்சியையும் இந்த வழக்கு ஏற்படுத்தியது. குல்தீப் செங்கார் மீது பாஜக நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சனமும் எழுந்தது. இந்த விவகாரம் பாஜகவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இதையடுத்து, குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டார். அவரைக் கட்சியில் இருந்தும் பாஜக தலைமை அதிரடியாக நீக்கியது.

குற்றச்சாட்டை உறுதி செய்தது
குல்தீப் சிங் செங்கார் மீது போக்சோ சட்டம், பலாத்காரம், ஆட்கடத்தல், மிரட்டல், வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குல்தீப் செங்காருக்க்கு எதிரான 5 வழக்குகளையும் உன்னோவில் இருந்து டெல்லிக்கு மாற்றி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கை 45 நாட்களில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குல்தீப் செங்கார் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது.

ஆயுள் தண்டனை
இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு 25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை அளித்தது. டெல்லி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து குல்தீப் செங்கார் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மகளின் திருமணத்தில் பங்கேற்க அனுமதிக்க இடைக்கால ஜாமீன் கோரி குல்தீப் செங்கர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஜனவரி 27 முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. தினமும் கையெழுத்து போடவும், தலா ரூ.1 லட்சத்துக்கு இரண்டு பேர் ஜாமீன் உத்தரவாதம் கொடுக்கவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. முன்னதாக இந்த மனு மீதான விசாரணையின் குல்தீப் செங்கர் மகளின் திருமண நிகழ்ச்சிகள் அதிக நாட்கள் நடத்தப்படுவதாகவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.












Click it and Unblock the Notifications