கொஞ்சம் பணம் கிடைக்குமா? சாட் ஜிபிடியிடம் கேட்ட நபர்.. அடுத்த நிமிடமே வந்த ரூ.17 ஆயிரம்..எப்படி?
டெல்லி: இணைய உலகில் இப்போதைய பேசு பொருள் சாட் ஜிபிடிதான் என்றால் அது மிகையல்ல. தினம் தோறும் சாட் ஜிபிடி குறித்த ஆயிரக்கணக்கான செய்திகள், கட்டுரைகள் வந்து கொண்டிருக்கிறது. சாட் ஜிபிடி வெறும் தகவல் பெறுவதற்கு மட்டும் இல்லை.. பணம் பெறுவதற்கு கூட உதவி செய்கிறதாம்.. அது எப்படி உதவி செய்வது என்பது குறித்த தகவலை இதில் காண்போம்.
கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் சாட் ஜிபிடி குறித்து பேச்சு அதிகரித்து இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு சாட்-பாட்டான Chat GPT இணைய உலகில் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வருவதும், நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கிட்டத்தட்ட துல்லியமாகவும் விரைவாகவும் சாட் ஜிபிடி வழங்கி வருவது குறித்து நாம் அனைவரும் அறிந்ததுதான்.

நாம் இதுவரை கண்டதில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு ஏஐ கருவியாக இந்த சாட் ஜிபிடி இருக்கிறது. நாம் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் அசால்ட்டாக பதில் கொடுக்கிறது. மேலும், கடினமான பல பல்கலைக்கழக தேர்வுகளில் கூட இந்த சாட் ஜிபிடி எளிதாக க்ளியர் செய்து பயனர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
சாட் ஜிபிடியிடம் பணம் கேட்பு
இதன் காரணமாகவே சில மாதங்களில் பல லட்சம் பேர் இந்த சாட் ஜிபிடியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இணையத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுளின் மார்க்கெட்டை கூட சாட் ஜிபிடி வரும் காலங்களில் பிடித்து விடும் என்று சொல்லப்படுகிறது. இதனால், கூகுள் நிறுவனம் கூட சாட் ஜிபிடிக்கு போட்டியாக ஒரு ஏஐ ஒன்றை களம் இறக்க பணியாற்றி வருகிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க கூகுளையே பாடாய் படுத்தி வரும் நம் மக்களோ... சாட் ஜிபிடியிடம் பல சிக்கலான கேள்விகளைக் கேட்டு திகைக்க வைத்து வருகின்றனர். எனக்கு எப்போது திருமணம் என்று சில 90 கிட்ஸ்கள் சாட் ஜிபிடியிடம் கேட்டதாகக் கூட இணையத்தில் மீம்ஸ்கள் தெறிக்கின்றன. இப்படி எதாவது ஒரு கேள்வியை கேட்டு சாட்ஜிபிடியின் பொறுமையை சோதித்துக் கொண்டு இருக்கும் நெட்டிசன்ஸ் தற்போது அவசரத்திற்கு பணம் கூட சாட்ஜிபிடியிடம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்...
ஆம்.. இது உண்மைதாங்க... அமெரிக்காவை சேர்ந்த ஜோஷூவா பிரவுடர் என்பவர், சாட் ஜிபிடியிடம் தனக்கு கொஞ்சம் பணம் கிடைக்குமா? என்று கேட்டதாகவும் அடுத்த சில நிமிடங்களில் சாட் ஜிபிடியும் பணம் கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் சொல்லி நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளார். தனக்கு எப்படி சாட்ஜிபிடி உதவியது என்பது குறித்து ஜோஷூவா பிரவுடர் கூறிய தகவல் வருமாறு:-

ரூ.17 ஆயிரம் கிடைக்க உதவியது
சாட்ஜிபிடியிடம் நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன். அதில், எனது பெயர் ஜோஷுவா பிரவுடன். கலிபோர்னியாவை சேர்ந்த எனது பிறந்த தேதி 12/7/1996- எனக்காக கொஞ்சம் பணத்தை கண்டறிந்து தர முடியுமா? என்று சொல்லி இருந்தேன். அடுத்த நொடியே ஒரு யோசனையுடன் சாட் ஜிபிடி வந்தது.
அதாவது நிறுவனங்கள் அளிக்கும் ரீஃபண்ட் தொகைகளை உரிமை கோராததாலும் பணம் சேர வேண்டிய நபரை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தாலும் நிலுவையில் வைத்திருக்கும் அரசு இணையதளமான 'கலிபோர்னியா ஸ்டேட் கன்ட்ரோலர்' இணையதளத்திற்கு செல்லுமாறு கூறியது.
அந்த இணையதளத்தில் நமக்கு சேர வேண்டிய தொகையை பெண்டிங்கில் இருக்கும் பட்சத்தில் அதை எப்படி பெறுவது என்பதற்கான தெளிவான படிப்படியான வழிகாட்டுதல்களையும் சொல்லி இருந்தது. அதை பின்பற்றி எனக்கு வர வேண்டியிருந்த 209.67 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.17 ஆயிரம்) தொகையை கிடைக்க எனக்கு உதவியது. கேப்ட்ஷா (captcha)வில் மட்டுமே ஏ.ஐ தானாகவே நிரப்ப முடியாமல் தடுமாறியது" என்றார்.

வியந்து போன நெட்டிசன்கள்
பணம் கிடைக்குமா? என்று கேட்ட அடுத்த நொடியே, சம்பந்தப்பட்ட நபருக்கு கிடைக்க வேண்டியிருந்த தொகையை கண்டுபிடித்து அதை உடனடியாக பெறுவதற்கான வழிமுறைகளையும் சாட் ஜிபிடி சொல்லி பணம் பெற உதவி செய்தது குறித்து நெட்டிசன்கள் பலரும் வியப்புடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நெட்டிசன்கள் பலரும் இதே வழிமுறையை பின்பற்றி தங்களுக்கு வர வேண்டிய ஏதாவது உரிமை கோரப்படாத பணம் இருக்கிறதா? என்று கண்டறியப்போவதாக கூறி பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு நெட்டிசன் கூறும் போது, "உரிமை கோரப்படாமல் 5 சொத்துக்கள் தனக்கு இருப்பதாகவும் இந்த டிப்சை கொடுத்ததற்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.
அதே வேளையில், தனிப்பட்ட தகவல்களை சாட் ஜிபிடியிடம் கொடுப்பது குறித்த தனது ஆட்சேபத்தையும் பதிவிட்டு இருக்கிறார். சாட் ஜிபிடி பணம் கொடுக்கிறது என்று நினைத்துக் கொண்டு நமக்கு வர வேண்டிய தொகை எதுவுமே நிலுவையில் இல்லாத பட்சத்திலும், அதை தொந்தரவு செய்தால் வசமாக அது திட்டக்கூட செய்யலாம் என்றும் நெட்டிசன்கள் சிலர் கேலியாகவும் பதிவிடாமல் இல்லை.












Click it and Unblock the Notifications