கொரோனாவை சமாளிக்க இந்தியாவுக்கு விமானம் மூலம் அவசர கால உதவிகளை அனுப்பிய அமெரிக்கா
டெல்லி: இந்தியாவின் கோவிட் பாதிப்புகளை சமாளிக்க அமெரிக்கா விமானம் மூலம் அவசர உதவிகளை நேற்று அனுப்பியது.
ஏப்ரல் 26ஆம் தேதி உறுதி அளித்தபடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கோவிட் பெருந்தொற்று காரணமாக உயிர்களைக் காப்பாற்றவும், தொற்று பரவலைத் தடுக்கவும், இந்திய மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் USAID என்ற சர்வதேச வளர்ச்சிக்கான ஐக்கிய அமெரிக்க அமைப்பின் மூலமாக துரித நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
அதன்படி, நேற்று இந்தியாவுக்கான அவசர உதவிகள் முதல் தவணையாக அனுப்பி வைக்கப்பட்டன. கலிஃபோர்னியா மாநிலத்தின் நன்கொடையாக 440 ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெகுலேட்டர்கள் உள்ளிட்ட அவசர கால உதவிகள் உலகின் மிகப்பெரிய ராணுவ விமானத்தில், அமெரிக்காவின் டிராவிஸ் விமானப்படை தளத்தில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், நோய்த் தொற்றை முன்னதாகக் கண்டறிந்து, தடுக்க உதவும் 960,000 விரைவாக நோய் அறியும் பரிசோதனைக்குரிய கருவிகள், முங்களப்பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஒரு லட்சம் என்95 முகக்கவசங்கள் ஆகியவையும் அனுப்பப்பட்டுள்ளன.
இன்றைய அறிவிப்பு, யூ.எஸ்.ஏ.ஐ.டி. இந்தியாவில் பெருந்தொற்றுக்குத் தீர்வு காணும் முயற்சியின் அடிப்படையில் அமைந்துள்ளது. தொற்று ஆரம்ப காலம் முதல் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள உதவி சுமார் 23 மில்லியன் டாலர் ஆகும். மேலும், 320 ஆரம்ப சுகாதார மையங்களில் பயன்படுத்துவதற்காக ஆயிரம் மருத்துவ ஆக்சிஜன் செறிவுகளையும் (கான்சன்டிரேட்டர்) வாங்கி அனுப்ப உள்ளது.
யூ.எஸ்.ஏ.ஐ.டி. மூலமாக அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கி வரும் உதவிகள் உயிர்களைக் காக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும், பரிசோதனை மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்தவும், பெரும் தொற்று சவாலை எதிர்கொள்ள புதுமையான வழிகளில் நிதி திரட்டவும் உதவியுள்ளது.
தாய் சேய் நலம், சிசு மரணம், போலியோ, ஹெச்.ஐ.வி., காசநோய் உள்ளிட்ட இந்தியாவின் பல உடல்நல சவால்கள் விஷயத்தில் யூ.எஸ்.ஏ.ஐ.டி இந்தியாவுடன் மிக நெருக்கமாக செயல்பட்டுள்ளது.
கடந்த 70 ஆண்டு காலமாக அமெரிக்கா இந்திய மக்களுக்கு தோளோடு தோளாய் நின்றுள்ளது. இப்போதைய கோவிட்-19 தொற்றையும் சேர்ந்து எதிர்கொள்ளும். தொற்றுநோய் ஆரம்ப காலகட்டத்தில் அமெரிக்க மருத்துவமனைகள் சிரமப்பட்டபோது
இந்தியா அமெரிக்காவிற்கு உதவி அனுப்பியது போலவே, இந்தியாவுக்கு உதவி தேவைப்படும் இந்த நேரத்தில் உதவ அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு நிவாரணப் பணிகளில் உதவ நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் சர்வதேச பேரிடர் தகவல் மையத்தின் இணைய தளத்தை (https://www.cidi.org) பார்க்கலாம்.