விரைவில் பொதுசிவில் சட்டம்.. மற்ற மாநிலங்களும் இதை பின்பற்றனும் - உத்தராகண்ட் முதலமைச்சர்
டெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உறுதியளித்து இருக்கிறார்.
உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக 2 வது முறையாக பதவியேற்றுக் கொண்ட புஷ்கர் சிங் மறுநாளே பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என அவர் உறுதியளித்தார்.
இதில் முக்கிய வாக்குறுதியான பொது சிவில் சட்டத்தை நிச்சயம் கொண்டு வருவோம் என அவர் தெரிவித்து இருந்தார்.
பெட்ரோல் விலை உயர்ந்தது.. உபி தேர்தலின்போது நின்றது! மீண்டும் உயருது; ரிப்பீட்டு -ராஜஸ்தான் முதல்வர்
உத்தராகண்ட் முதலமைச்சர் பேச்சு
இந்த நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பஞ்சன்யாவின் நிகழ்வு ஒன்றில் புஷ்கர் சிங் தாமி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "பொது சிவில் சட்டத்தை கொண்டு வர விரைவில் குழு அமைக்க இருக்கிறோம். சட்ட நிபுணர்களை கொண்ட அந்த குழு சமர்பிக்கும் மசோதாவை அமல்படுத்துவோம். உத்தராகண்ட் ஒரு தெய்வ பூமி. எங்களைபோல் மற்ற மாநிலங்களும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
விரைவில் பொது சிவில் சட்டம்
உத்தராகண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். உத்தராகண்ட் மாநிலத்தில் விரைவில் ரோஹிங்கியாக்கள் மற்றும் ஊடுருவிகள் குறித்து கண்டறிய சிறப்பு குழு அமைத்துள்ளோன். இதற்கான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு குற்றவாளிளை போலீஸ் கைது செய்யும். மதமாற்றத் தடைச் சட்டத்தையும் வலுவாக அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்." என்றார்.
2009-ல் அறிவித்த அத்வானி
இந்தியாவிலேயே பொதுசிவில் சட்டத்தை முதன்முதலில் கொண்டு வர இருக்கும் மாநிலம் உத்தராகண்ட்தான் என புஷ்கர் சிங் தாமி அப்போது தெரிவித்து இருந்தார். கடந்த 2009 மக்களவைத் தேர்தலின்போதே பாஜக வெற்றிபெற்றால் நாடு முழுவதும் பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அத்வானி உறுதியளித்தார். 2019 மக்களவைத் தேர்தல் அறிக்கையிலும் பாஜக பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தது.
கேள்விக்குறியாகும் நாட்டின் பண்முகத்தன்மை
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் பல மதங்கள், மொழிகள், கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அரசியலமைப்பில் மத, மொழி, இன, கலாச்சார ரீதியாக திருமணம், சொத்து போன்றவற்றில் தனித்தனி சட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.
பொதுசிவில் சட்டத்தில் எதிர்ப்பு ஏன்?
இந்த நிலையில், இந்த சிறப்பு சட்டங்களை நீக்கிவிட்டு பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது பாஜகவின் பல நாள் திட்டமாக உள்ளது. ஆனால், அவ்வாறு அறிவிக்கப்படுவது அரசியலமைப்புக்கும் சிறுபான்மையினர்களுக்கும் எதிரானது என்றும் இந்தியாவின் எதிர்காலத்துக்கே ஆபத்தானது எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
ஆழம் பார்க்கிறதா பாஜக
கர்நாடகாவில் ஹிஜாப், ஹலால் இறைச்சி, ஒலிப்பெருக்கி என அடுத்தடுத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வரும் அதே நேரத்தில்தான் இந்த முடிவையும் உத்தராகண்ட் மாநில அரசு எடுத்திருக்கிறது. தேசியளவில் இதை அமல்படுத்த வேண்டும் என்பது பாஜக அரசின் திட்டமாக உள்ள நிலையில், அதற்கு எழும் எதிர்வினைகள் எவ்வாறு உள்ளன என்பதை கணக்கிடவே பாஜக ஆளும் உத்தராகண்டில் மட்டும் முதல்கட்டமாக பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
பாஜகவின் புதிய வியூகம் இதுவா?
மக்களவையில் அமல்படுத்தப்பட்ட முத்தலாக், சிஏஏ, வேளாண் சட்டங்களுக்கு தேசியளவில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனை தொடர்ந்து முதலில் பாஜக ஆளும் மாநிலங்களில் இத்தகைய சட்டங்களை கொண்டு வந்து அங்குள்ள நிலவரங்களை பொறுத்து தேசியளவில் சட்டமாக்குவதை புதிய வியூகமாக மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.