வேக்சின் போட்ட பெண்களின் தாய்ப்பாலில் கொரோனா ஆன்டிபாடி.. குழந்தைகளை பாதுகாக்கும்-ஆய்வில் நல்ல செய்தி
டெல்லி: கொரோனா வேக்சின் போட்டுக் கொண்ட பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் குறிப்பிடத்தக்க அளவு கொரோனா ஆன்டிபாடிகள் உள்ளதாகவும் இது குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்க உதவும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ் தான். இந்த கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் மிகத் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
இருப்பினும், கொரோனா பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், இன்னும் எந்த ஒரு நாட்டினாலும் வைரஸ் பாதிப்பை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

கொரோனா வேக்சின்
தற்போதைய சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒருபுறம் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு வேக்சின் உற்பத்தி இல்லாததால் தடுப்பூசி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மறுபுறம் பொதுமக்களிடையே நிலவும் சந்தேகங்களும் வேக்சின் பணிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்கள்
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் வேக்சின் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும்கூட தயக்கம் இந்த இரு பிரிவினரும் வேக்சின் போடுவது கணிசமாகக் குறைந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் தான் அதிகளவில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருக்கும். எனவே, அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உடனடியாக அவர்கள் வேக்சின் போட்டுக் கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தாய்ப்பாலில் கொரோனா ஆன்டிபாடிகள்
இந்நிலையில், கொரோனா வேக்சின் போட்டுக் கொண்ட பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் குறிப்பிடத்தக்க அளவு கொரோனா ஆன்டிபாடிகள் உள்ளதாகவும் இது குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்க உதவும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தாய்ப்பாலில் கொரோனா ஆன்டிபாடிகள் குறிப்பிடத்தகுந்த அளவு உள்ளதாகவும் இது குழந்தைகள் தேவையான ஆன்டிபாடிகளை வழங்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஏன் முக்கியம்
குழந்தைகள் பிறக்கும்போது அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு முழுமையாக வளர்ச்சியடைந்து இருக்காது. எனவே, அந்த சமயத்தில் எந்தவொரு நோயையும் அவர்களது உடலால் சமாளிக்க முடியாது. மேலும், நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருக்கும் என்பதால் தடுப்பூசிகளையும் செலுத்த முடியாது. இந்த காலகட்டத்தில் தாய்ப்பால் மூலமே குழந்தைகள் தங்களுக்குத் தேவையான நோயெதிர்ப்பு சக்தியைப் பெறுகிறார்கள் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
Recommended Video

அதிகமாக இருக்கிறது
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "கடந்த டிசம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை இந்த ஆய்வை செய்தோம். வேக்சின் போடுவதற்கு முன், முதல் டோஸ் போட்டுக் கொண்ட பிறகு, 2ஆம் டோஸ் போட்டுக் கொண்ட பிறகு என மூன்று முறை தாய்ப்பாலைச் சோதித்தோம். வேக்சின் போட்ட பிறகு, குறிப்பாக 2ஆம் டோஸ் வேக்சின் போட்ட பிறகு தாய்ப்பாலில் கொரோனா ஆன்டிபாடிகள் கணிசமாக அதிகரித்துள்ளது எங்கள் தெரிய வந்தது

குழந்தைகளைப் பாதுகாக்கும்
இயற்கையாக கொரோனாவால் பாதிக்கப்படும் போது உருவாகும் ஆன்டிபாடிகளை விட, தாய்ப்பாலில் அதிக ஆன்டிபாடிகள் உள்ளன. இது குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும். உலகெங்கும் நடைபெறும் பல ஆய்வுகளிலும் ஆன்டிபாடிகள் தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்குக் கடத்தப்படுவது உறுதியாகியுள்ளது" என்றார். இந்த ஆய்வின் மூலம் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா வேக்சினை எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது மட்டுமில்லை, அது அவர்களது குழந்தைகளையும் பாதுகாக்கும் எனத் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications