அனைவருக்கும் தடுப்பூசி எப்போது?.. எல்லோருக்கும் இப்போதைக்கு வாய்ப்பில்லை.. சுகாதாரத் துறை
டெல்லி: வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தற்போது இல்லை என்று மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதல் முறையாக நேற்று தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது.
பொதுமக்கள் முறையாக கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் இருப்பதே கொரோனா பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி பணிகள்
தற்போதைய சூழ்நிலையில், கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும்கூட கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தற்போது 45 வயதைக் கடந்தவர்களுக்குத் தடுப்பூசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வயது நிபந்தனையை நீக்க வேண்டும் என மகாராஷ்டிரா மற்றும் டெல்லி முதல்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்,
திட்டமில்லை
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், கொரோனாவால் எளிதில் உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளவர்கள்தான் முதலில் பாதுகாக்கப்பட வேண்டும். ஆபத்தில் உள்ளவர்களை முதலில் பாதுகாப்பது தான் நமது இலக்கு. விரும்பும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது நமது நோக்கம் இல்லை. தேவைப்படுபவர்களுக்குச் சரியான நேரத்தில் தடுப்பூசி வழங்குவது தான் நமது நோக்கம் என்று அவர் கூறினார்.
சிரமம் ஏற்படும்
இப்போதைய சூழ்நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டால், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும் என்று மற்றொரு மூத்த அதிகாரி தெரிவித்தார். தற்போதுள்ள நிலைமைக்கு ஏற்றபடியே கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் நடைபெறுவதாகவும் சரியான நேரத்தில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், எந்த நாடும் தற்போது 45 வயதுக்குக் குறைவானவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணியை தொடங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிரா
இந்தியாவில் மகாராஷ்டிரா கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. அங்குத் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் அங்கு கொரோனா உயிரிழப்புகளும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்திருந்தார்.
டெல்லியில் நான்காம் அலை
அதேபோல தலைநகர் டெல்லியிலும் கொரோனா பாதிப்பின் நான்காவது அலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்குத் தினசரி கொரோனா பாதிப்பு மூவாயிரத்தை கடந்துள்ளது. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கத் தேவையான மருந்துகள் தயாராக உள்ளதாகவும் மத்திய அரசு வயது கட்டுப்பாட்டை நீக்கினால் மூன்று மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க முடியும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.