காஷ்மீர் விவகாரத்தில் காங். மோசடி.. கூட்டணி கட்சிக்கு எதிராக ராஜ்யசபாவில் கொந்தளித்த வைகோ.. பரபரப்பு
டெல்லி: திமுக காங்கிரஸ் கூட்டணியில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஜம்மு காஷ்மீர் பிரச்சனையின் ஆணி வேர் காங்கிரஸின் தவறான கொள்கை முடிவுகள்தான் என்று குறிப்பிட்டு ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜ்யசபாவில் நேற்று, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று வைகோ பேசினார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்காக, மத்திய பாஜக அரசை வைகோ சாடுவார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் பாஜக அரசை மட்டுமல்ல, இப்பிரச்சினையின் ஆரம்ப கால விஷயங்களையும் நினைவு கூர்ந்து, காங்கிரசையும் ஒரு பிடிபிடித்துவிட்டார். இதை காங்கிரஸ் உறுப்பினர்களே எதிர்பார்க்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
கூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும்- அணு கழிவை கொட்ட கூடாது: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்
நேருவால் ஆரம்பம்
வைகோ கூறியதாவது: இந்தியா காஷ்மீருக்கு வழங்கிய, தனது வாக்குறுதியை நிறைவேற்றாததால் இன்று ஒரு துக்க நாள். பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் நிலப்பரப்பில் நுழைந்தபோது, மகாராஜா ஹரி சிங் ஜவஹர்லால் நேருவுக்கு தூதரை அனுப்பினார். தங்களுக்கு உதவி செய்ய கோரினார். அப்போதுதான், காஷ்மீர் இந்தியாவுடன் இணைய ஒப்பந்தம் போடப்பட்டது.
காங்கிரஸ் மோசடி
இந்தியாவுடன் செல்ல முடிவு செய்தபோது, காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லா ஒரு நிபந்தனையை முன்வைத்தார்: "மாநிலத்தின் தனித்தன்மை மற்றும் அசல் தன்மை சமரசம் செய்யப்படாது" என்பதுதான் அந்த நிபந்தனை. எனவே, ஜம்மு-காஷ்மீர் மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேரு வாக்குறுதி அளித்தார். காங்கிரஸால் ஒரு மோசடி செய்யப்பட்டுவிட்டது. இத்தனை ஆண்டுகளில் காங்கிரஸ் ஜனநாயகத்தை கொன்றுவிட்டது.
இதயம் வேதனை
ஒருபக்கம், புதுச்சேரி மாநிலமாக வேண்டும் என்று உரிமை கோருகிறது. நீங்களோ ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றுகிறீர்கள். கடந்த சில நாட்களாக காஷ்மீரில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது, காஷ்மீர், கொசோவோ அல்லது தெற்கு சூடானாக மாறக்கூடாது என்று என் இதயம் வேதனையடைகிறது.
ட்ரம்ப் ஆட்டம்
நம்மை எதிரியாக நினைத்து எதிர்க்கும் நாடுகள் உள்ளன. அவர்கள் இந்த பிரச்சினையை நமக்கு எதிராக பயன்படுத்துவார்கள். ஐ.நா தனது மனித உரிமைகள் கவுன்சிலை அனுப்பும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வியூகத்தை மிகவும் கவனமாக கையாளுகிறார். இவ்வாறு வைகோ பேசினார்.