G RAM G மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்! ஆதரவு கொடுத்த அதிமுக! நள்ளிரவில் எதிர்க்கட்சி எம்பிகள் தர்ணா
டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக மத்திய அரசு விபி-ஜி ராம் ஜி திட்டத்தைக் கொண்டு வரும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இது தொடர்பாக இரவு வரை விவாதம் நடந்த நிலையில், கடைசியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது. அதிமுக இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் நள்ளிரவில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. கடந்த 2005ல் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இந்தத் திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக விக்க்சித் பாரத்- ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) அதாவது விபி-ஜி ராம் ஜி என்ற திட்டத்தைக் கொண்டு வர மசோதாவை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். காந்தியின் பெயரை நீக்கவே மத்திய அரசு இதைச் செய்வதாகக் காங்கிரஸ் விமர்சித்தது. மேலும், இது மாநிலங்களின் நிதிச் சுமையை அதிகரிக்கும் என்றும் பல்வேறு எதிர்க்கட்சி எம்பிகள் விமர்சித்தனர். அதாவது 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் செலவுகளை மத்திய அரசே ஏற்கும். ஆனால், இந்த திட்டத்தில் 60%ஐ மத்திய அரசு கொடுக்கும் நிலையில், 40% மாநில அரசு கொடுக்க வேண்டும். இதற்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
இருப்பினும், இந்த மசோதா லோக்சபாவில் வியாழக்கிழமை பிற்பகல் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ராஜ்யசபாவிலும் வியாழன் மாலை தொடங்கி இரவு வரை விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்தனர். ஜி ராம்ஜி மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இருப்பினும், இது ராஜ்யசபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது.
தொடர்ந்து எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பாக அதிமுக இந்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்தது. இந்த மசோதாவை ஆதரிப்பதாக அதிமுக உறுப்பினர் தம்பிதுரை பேசினார். அதேநேரம் திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது.. காந்தியின் பெயர் இருக்க வேண்டும் என்றும் மாநில அரசின் நிதிப் பகிர்வை 40%ஆக உயர்த்துவதைக் கைவிட வேண்டும் என்றும் தம்பிதுரை பேசியிருந்தார்.
VIDEO | Parliament Winter Session: Opposition MPs protest at Makar Gate after passage of VB-G RAM G Bill. #Parliament #WinterSession #GRAMGBill pic.twitter.com/G4ONlF4pxe
— Press Trust of India (@PTI_News) December 18, 2025
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறிய நிலையில், இது ஒப்புதலுக்காகக் குடியரசுத் தலைவரிடம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜி ராம் ஜி மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், நள்ளிரவில் இந்த மசோதாவுக்கு எதிராக சம்விதன் சதனுக்கு வெளியே எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் திமுக சார்பில் திருச்சி சிவா, வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications