தருண் அகர்வால் குழு சொன்னபடி, ஆலையை மீண்டும் இயக்க நாங்க ரெடி: ஸ்டெர்லைட் அறிவிப்பு
Recommended Video
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவதற்கு தயாராக இருப்பதாக வேதாந்தா குழுமம் அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு ஏற்படுத்துவதாக கூறி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 அப்பாவி மக்கள் பலியாகினர்.
இதையடுத்து மக்களின் கோபம் அதிகரித்ததன் காரணமாக மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கக்கூடிய வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதையடுத்து, முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கண்டறிய இந்த குழு நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டது. அகர்வால் கமிட்டி சமீபத்தில் தனது பரிந்துரையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அளித்தது.
அதில் ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை நம்ப முடியாது என்று கூறியுள்ள அந்த ஆணையம், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியில்லை என்றும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்காமலேயே ஆலை மூடப்பட்டு உள்ளது என்றும் குற்றம்சாட்டியது.
ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் இயக்க அனுமதி கொடுக்கலாம் என்றும் தருண் அகர்வால் குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் வேதாந்தா குழுமம் இன்று தனது அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில் தருண் அகர்வால் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.