விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி.. திமுகவின் தாராளம்.. பலே பின்னணி இதுதான்
Recommended Video
டெல்லி: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, மக்கள் நல கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை அங்கம் வகித்தன.
இந்த கூட்டணியின் காரணமாக, திமுகவின் வெற்றி வாய்ப்பு பறிபோனதாக கூறப்பட்டாலும், மக்கள் நல கூட்டணியால் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள்
புது கூட்டணி
இந்த நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் ஆகியவை திமுகவுடன் நெருக்கம் காட்ட தொடங்கி விட்டன. ஆனால் லோக்சபா தேர்தல் கூட்டணியில், காங்கிரசை தவிர இந்தக் கட்சிகளை சேர்க்காமலேயே இருந்து வந்தது திமுக. இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை நீடித்து வந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை, திமுக கூட்டணியில் சேர்த்துக் கொண்டால், மேற்கு மண்டலத்தில் திமுகவுக்கு வாக்குகள் குறையும் என்ற ஒரு கருத்து அம்மாவட்டங்களின், திமுக செயலாளர்களால் தலைமையிடம் முன்வைக்கப்பட்டதாகவும் தகவல் உண்டு.
இழுபறி
எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணியில் இருக்குமா, இல்லையா? தோழமை கட்சி ஆகவே நீடிக்குமா? அல்லது விடுதலை சிறுத்தைகள் தனித்து போட்டியிடுமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன. அவ்வாறு கூட்டணியில் சேர்த்துக் கொண்டாலும் அதிகபட்சமாக ஒரு தொகுதிதான் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதும் பேச்சாக இருந்தது.
2 தொகுதிகள்
ஆனால், திமுக தலைவர்களுடன் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூட்டணியில் சேர இழுபறி நீடித்த, நிலையில் இரு தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பல்வேறு தரப்பிலும் புருவத்தை உயர்த்தி உள்ளது.
நிபந்தனை
இது குறித்து, திமுக வட்டாரங்களில் கேட்டபோது, இரு தொகுதிகளை விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கீடு செய்வதன் நோக்கம் அந்த கட்சி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கிறார்கள். கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கீடு செய்தால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் எண்ணிக்கை 25க்கும் குறைவாகிவிடும். இதை திமுக தலைமை விரும்பவில்லை. எனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தவிர்த்த மற்ற கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தி வருகிறது.
திருமாவளவன் சம்மதம்
கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி இவ்வாறான நிபந்தனையின்பேரில்தான், திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முதலில் தயக்கம் தெரிவித்தது. தனி சின்னத்தில் போட்டியிடத்தான், திருமாவளவன் விரும்பினார். ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தனி சின்னத்தில் போட்டியிட்டால், திமுக கூட்டணியில் ஒரு தொகுதி வேண்டுமானாலும் தருகிறோம் என்று தலைமை தெரிவித்து விட்டது. இதனால்தான் கூட்டணி முடிவு இழுபறி நீடித்து வந்தது. ஆனால் சிதம்பரம் தொகுதியில், திருமாவளவனும், திருவள்ளூர் தொகுதியில் ரவிக்குமாரும், போட்டியிட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருப்பம். அதற்கு வசதியாக, இரு தொகுதிகள் தேவைப்படுவதால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு திருமாவளவன் சம்மதித்து விட்டதாக தெரிகிறது.
இரு தொகுதிகள் ரகசியம்
இதையடுத்து, அந்த கட்சிக்கு திமுக கூட்டணியில் இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் கூட்டணியை வலுப்படுத்தியாயிற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் திமுக தொண்டர்களை மகிழ்ச்சிப்படுத்தியது போலவும் ஆகிவிடுகிறது என்று ஒரே கல்லில் 2 மாங்காய்கள் அடிக்க, கணக்குப் போட்டுள்ளது திமுக தலைமை.
சின்னம்
இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிடுவது சற்று மனரீதியாக அந்த கட்சி தொண்டர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களை சமாதானப்படுத்த திருமாவளவன் திட்டமிட்டுள்ளார். இன்றைய பேட்டியிலும் கூட திருமாவளவன் மறைமுகமாக இதை தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் அடுத்த இரு நாட்கள் ஆலோசனை நடத்திவிட்டு எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பாக அறிவிப்பை வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கு முன்பாகவும், பிற கட்சி சின்னத்திலும் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட வரலாறு உள்ளது என்பது நினைவுபடுத்ததக்கது.