சசி தரூர் vs மல்லிகார்ஜுன கார்கே.. புதிய காங்கிரஸ் தலைவர் யார்? 65 இடங்களில் தொடங்கிய வாக்குப்பதிவு!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது. இதில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதையடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்தனர். மேலும் மூத்த தலைவர்கள் 23 பேர் அதிருப்தி அணியாக மாறி ஜி23 குழுவாக செயல்பட்டனர். ஒவ்வொரு மாநில தேர்தலின்போதும் கூட காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என அவர்கள் கூறி வந்தனர்.
22 ஆண்டுக்கு பின்.. நாளை காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. டெல்லி செல்ல மறுத்த ராகுல்.. ஓட்டளிப்பது எப்படி?
இன்று வாக்குப்பதிவு
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்.24ம் தேதி தொடங்கியது. இத்தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். சில நாட்களாக பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்த நிலையில், இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
65 வாக்குச்சாவடிகள்
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாநிலத்தில் வாக்களிக்கத் தகுதியுடைய நிர்வாகிகள் 9,000-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கின்றனர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார்.
யார் யார் எங்கு வாக்களிப்பு?
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வாக்களிக்கின்றனர். தேசிய ஒற்றுமை யாத்திரையில்ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் சங்கனகல்லு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க உள்ளனர்.
எப்போது முடிவு?
24 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடங்கியுள்ளது. இதில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள், மாவட்ட தலைவர்கள், மாநில முன்னாள் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் வாக்களித்து புதிய தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். இதற்காக க்யூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்குப் பின்னர் சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள் டெல்லி கொண்டு செல்லப்பட்டு, காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்படும். தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.