மிக முக்கிய தருணம், கொரோனா வீரர்களுக்கு பொருத்தமான அஞ்சலி... தடுப்பூசி ஒப்புதல் குறித்த ஹர்ஷ் வர்தன்
டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது நமது கொரோனா வீரர்களுக்கு பொருத்தமான அஞ்சலியாக இருக்கும் என்று அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இன்று சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்தின் அவசரக்கால பயன்பாட்டிற்குத் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மிக முக்கிய தருணம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கொரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போரில் இது மிக முக்கிய தருணம். சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்துகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்பு மருந்திற்கான நமது காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
ரிஸ்க் எடுத்தற்கு பலன் தற்போது கிடைத்துள்ளது - தடுப்பூசி அனுமதி பற்றி சீரம் சிஇஓ ஆதார் பூனவல்லா
இந்த தடுப்பு மருந்துகள் நமது கொரோனா வீரர்களுக்குப் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும். யாரும் எதிர்பாராத இதுபோன்ற காலங்களில் முன்மாதிரியான பணிகளை மேற்கொண்ட சுகாதார வல்லுநர்களுக்கும் முன்கள ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் அயராத முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.
தடுப்பு மருந்தை விரைவாகவும் தேவைக்கு ஏற்ற வகையிலும் விநியோகிக்க நாம் உருவாக்கிய வைத்துள்ள வலுவான விநியோகச் சங்கிலி உள்கட்டமைப்பின் பலன்களைப் பெறுவதற்கான நேரம் இது" என்று பதிவிட்டுள்ளார்.