சோனியா காந்தியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு! பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள அழைப்பு!
டெல்லி: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி டெல்லியில் இன்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார் மமதா. அதாவது பா.ஜ.க. ஒன்றும் தோற்கடிக்கப்படவே முடியாத கட்சி அல்ல என்பதை அதிரடி வெற்றி மூலம் நிரூபித்திருக்கிறார் மமதா பானர்ஜி.
இந்த உத்வேகத்துடன் மமதா பானர்ஜி தமது செல்வாக்கை, கட்சியை விரிவுபடுத்தும் முயற்சிகளில் இறங்கி உள்ளார். இதன் முதல் கட்டமாகத்தான் கடந்த வாரம் தியாகிகள் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் பங்கேற்றவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார் மமதா பானர்ஜி.
வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் - கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை
மோடி- மமதா சந்திப்பு
இப்போது டெல்லியில் 5 நாட்கள் பயணமாக முகாமிட்டுள்ள மமதா, நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ஒரு மாநில முதல்வர் என்ற அடிப்படையில் பிரதமர் மோடியை மமதா சந்தித்து பேசி தமது மாநில நலன்களுக்காக கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன் மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் மோடியிடம் மமதா வலியுறுத்தினார்.
சோனியாவுடன் இன்று சந்திப்பு
பின்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, ப. சிதம்பரம் உள்ளிட்டோருடனும் ஆலோசனை நடத்தினார் மமதா. இன்று சோனியா காந்தியை மமதா பானர்ஜி சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது ராகுல் காந்தியுடம் உடன் இருந்தார்.
ஓரணியில் திரள்வோம்..
சோனியாவுடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் மமதா பானர்ஜி கூறியதாவது: தேனீர் விருந்துக்காக சோனியா என்னை அழைத்திருந்தார். இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார். அரசியல் நிலவரம் பற்றி விவாதித்தோம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையான செயல்பாடு குறித்து ஆலோசித்தோம். இது நல்ல சந்திப்பு. இதன் விளைவுகள் விரைவில் தெரிய வரும்.
தனியே இருப்பதால் ஒன்றும் இல்லை
பா.ஜ.க.வை வீழ்த்த அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். நான் தனியாக இருப்பதால் எதுவும் நடக்காது. நான் ஒரு தலைவர் அல்ல. சாதாரண தொண்டன். தெருவில் இருந்து வந்த தொண்டன் அவ்வளவுதான். இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.
பாஜக பி டீம் தலைவர்கள்
மமதாவின் டெல்லி பயணமானது 2024 லோக்சபா தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் இப்போது இருந்தே ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இலக்காக கொண்டது. கடந்த காலங்களில் தேசிய அளவில் தேர்தல் நேரங்களில் கடைசி நேரங்களில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிவடைந்துள்ளன; எதிர்க்கட்சிகள் அணியில் இருந்த போதும் பாஜகவின் பி டீம் ஆக செயல்பட்டு குட்டையை குழப்பிவிட்டு அப்படி ஒரு ஒற்றுமை ஏற்படாமல் பார்த்துக் கொண்ட தலைவர்களும் உள்ளனர். இத்தனையையும் உள்வாங்கிக் கொண்டு கவனமுடன் களமாட முனைகிறார் மமதா.
மமதாவின் இலக்கு
காங்கிரஸ் கட்சி ஒன்றும் பலமான கட்சி அல்லதான். பெயரளவுக்கான தேசிய கட்சிதான். மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாகவே காங்கிரஸ் இருந்தாலும் தேசிய அளவில் நட்பு சக்தியாகவே பார்க்கிறார் மமதா. எந்த ஒரு எதிர்க்கட்சியையும் இம்முறை விட்டுவிடாமல் அரவணைத்து மெகா கூட்டணியை உருவாக்குவதுதான் மமதாவின் இலக்கு.
எதிர்க்கட்சிகள் ஒற்றுமை
மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் போது சரத்பவார், அகிலேஷ் யாதவ் என பல கட்சி தலைவர்களும் மமதாவை ஆதரித்தனர். இதனால் பெரும்பாலான எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மமதாவுக்கு சிரமம் இருக்காது. அப்படி எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டிய பின்னர் பிரதமர் வேட்பாளர் குறித்து பேசிக் கொள்ளலாம் என்பதும் மமதாவின் திட்டம்.
பாஜகவை திணறவைக்க முடிவு
முதலில் பாஜகவுக்கு கிலியை ஏற்படுத்தும் வகையில் மெகா கூட்டணியை சாத்தியப்படுத்த வேண்டும் என்பதுதான் அவரது அஜெண்டா. பெகாசஸ் உளவு விவகாரம், விவசாய சட்டங்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு என முக்கியமான பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகள் அத்தனையும் ஒற்றுமையுடன் நின்று ஆளும் பா.ஜ.க. அரசை திணற வைக்க வேண்டும் என்கிற மமதாவின் முயற்சிக்கான ரிசல்ட் வரும் காலங்களில்தான் தெரியும்.