இன்று முடியும் காலக்கெடு.. மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை ஏற்றுக்கொள்ள தயார்.. பேஸ்புக் அறிவிப்பு!
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் புதிய ஐடி விதிகளை ஏற்றுக்கொள்ளும் முடிவில் இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதேசமயம் இது தொடர்பாக அரசுடன் சில விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மத்திய தகவல்கள் தொழில்நுட்ப துறை மூலம் சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம் இந்த விதிகள் அறிவிக்கப்பட்டன.
ஓடிடி தளங்கள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிவிட்டர், இன்ஸ்ட்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வரும் கண்டெண்ட்கள் குறித்தும், அதன் மீது வைக்கப்படும் புகார்கள் குறித்து முடிவு எடுப்பதற்காக புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன. இந்த புதிய விதிகளை ஒப்புக்கொள்ள சமூக வலைத்தளங்களுக்கு மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது.

என்ன விதி
இந்த புதிய விதி பின்வரும் 4 விஷயங்களை உள்ளடக்கியது.
1.சமூக வலைத்தளம் மற்றும் ஓடிடி தளங்கள் தங்களிடம் வரும் புகார்களை விசாரிப்பதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். அந்த நிறுவனம் இந்திய நபர் ஒருவரை இதற்கு தொடர்பு கொள்ளும் அதிகாரியாக நியமிக்க வேண்டும்.
2. அரசு வைக்கும் புகார்களை இந்த அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். அரசு சொல்லும் நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.
3. சமூக வலைதங்களில் வரும் கண்டெண்ட்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும். இதில் மத்திய அமைச்சர்களும் இடம்பெறுவார்கள்.
4. இந்த குழுதான் சமூக வலைத்தளங்களில் வரும் கண்டெண்ட்களுக்கு எதிரான புகார்களில் நடவடிக்கை எடுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்டது.

எப்படி
அதாவது பேஸ்புக்கில் ஒரு வீடியோ வந்து, அது சர்ச்சையை ஏற்படுத்தினால், இந்த குறிப்பிட்ட அதிகாரியிடம் மத்திய அரசு முறையீடும் பின் அந்த தனி குழு இது தொடர்பாக விசாரிக்கும். அதன்பின் மத்திய அரசு புகார் அளித்த வீடியோ நீக்கப்படும். பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்ட்டா, வாட்ஸ் ஆப், ஓடிடி தளங்கள் அனைத்திற்கும் இந்த புதிய விதி பொருந்தும்.

ஏற்றுக்கொண்டது
இந்த புதிய விதியை ஏற்றுக்கொள்ள இன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. டிவிட்டர் இதை ஏற்றுக்கொள்ளாத நிலையில் மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் புதிய ஐடி விதிகளை பின்பற்றும் முடிவில் இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதே சமயம் இது தொடர்பாக அரசுடன் சில விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

தடை
இந்த விதிகளை பின்பற்றவில்லை என்றால் பேஸ்புக் தடை பெற வாய்ப்புள்ளது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த விதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனாலும் சில விஷயங்கள் குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை செய்ய உள்ளது. பேஸ்புக்கின் முடிவு காரணமாக, இனி பேஸ்புக் போஸ்டுகளில் சில கட்டுப்பாடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற நிறுவனங்கள்
இதில் பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டா, வாட்ஸ் ஆப் இரண்டையும் ஏற்கனவே வாங்கிவிட்டது. இரண்டுமே பேஸ்புக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதனால் அந்த நிறுவனங்களும் மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications