நாடாளுமன்றத்தில் காங். எம்பி ஆனந்த் சர்மா பேசிய ஆவேச பேச்சு.. அனல் பறந்த விவாதம்
டெல்லி: இந்தியா தான் உலகிலேயே இணையவசதிகளை நிறுத்துவதில் முதன்மையாக உள்ளது என டெல்லியில் இணையவசதிகள் நிறுத்தப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மூத்த எம்பி ஆனந்த் சர்மா குற்றம்சாட்டினார்.
கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்பிறகு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு நாளும் துறைவாரியாக விவாதங்கள் நடந்து வருகிறது.
இன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் பலர், மத்திய அரசின் அண்மைக்கால செயல்பாடுகளை விமர்சித்து பேசி வருகிறார்கள்,.
புலம் பெயர் தொழிலாளர்கள்
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி மூத்த எம்பி ஆனந்த் சர்மா பேசுகையில், குடியரசு தலைவரின் உரை, லாக்டவுனின்போது நேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலையை குறிப்பிட தவறிவிட்டது. ஒருபுறம் வேளாண் சட்டங்களுக்கு கடும் ஒரு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடக்கிறது. மறுபக்கம், குடியரசு தலைவர் வேளாண் சட்டங்களை பாராட்டுகிறார்.
மக்களின் உரிமை
தங்களுக்கு எதிரான செயல்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பது மக்களின் உரிமை. மக்கள் சொல்வதைக் கேட்பது அரசாங்கத்தின் கடமை. அமெரிக்காவுடன் உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். லாக்டவுனின் போது அமெரிக்க அரசு தங்கள் குடிமக்களுக்கு நிதி உதவியை வழங்கியது. ஆனால் நீங்கள்(மத்திய அரசு) நிறுவனங்களுக்கு ஊக்கத்தை வழங்கியுள்ளீர்கள். இது வி-வடிவ மீட்பு அல்ல. இது கே வடிவ மீட்பு.
என்ன நிர்பந்தம்
நாம் தான் உலகிலேயே இணைய சேவைகளை நிறுத்துவதில் முன்னிலையில் உள்ளோம். வேளாண் சட்டங்களை அவசர சட்டமாக கொண்டு வந்தது ஏன்? அரசியலமைப்பின் 123 வது பிரிவு அவரச சட்டம் கொண்டு வர நிர்பந்தம் இருக்க வேண்டும். அந்த நிர்பந்த காரணத்தை கேட்டு குடியரசு தவைர் திருப்தி அடைய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது, இதன்படி பார்த்தால் கொரோனா தொற்று நோயின் போது நீங்கள் அவசர சட்டம் கொண்டு வந்தீர்கள் சரி. வேளாண் சட்டத்தை அவசரமாக கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன. என்ன நிர்பந்தம் வந்தது.
வாபஸ் பெறுங்கள்
நீங்கள் வேளாண் சட்டம் தொடர்பாக மாநில அரசுகளுடன் பேசவில்லை. வேளாண் சட்டம் குறித்து நாடாளுமன்ற குழுவுக்கும் ஆய்வுக்கு அனுப்பவில்லை. அப்படி எல்லாம் செய்த நீங்கள்.. இப்போது வேளாண் சட்டங்களுக்கு மக்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கேட்கலாமா? உங்களை மன்றாடி, கைகூப்பி கேட்கிறேன். தயவு செய்து வேளாண் சட்டத்தை வாபஸ் பெறுங்கள். இந்த சட்டங்களால் அரசியலமைப்பு கேள்விக்குரியாகி உள்ளது.. வேளாண்மை மாநில பட்டியலில் இருக்கிறது. மத்திய அரசின் பட்டியலில் இல்லை" இவ்வாறு ஆனந்த் சர்மா நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார். அதேநேரம் முக்கிய பிரச்சினைகள் குறித்த முடிவுகளை தாமதப்படுத்தியதற்காக ஆனந்த் சர்மா நீதிமன்றங்களையும் விமர்சித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.