நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கட்டாயம் கொண்டு வருவோம்.. அடித்து சொல்லும் அமித்ஷா
டெல்லி: பாஜகவின் நீண்ட நாள் வாக்குறுதியான பொது சிவில் சட்டத்தை கட்டாயம் நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
சிவில் விவகாரங்களில் ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு விதமான சட்டங்கள் பின்பற்றப்படுவதால், இதை களைந்து பொதுவான ஒரு சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற வாதத்தை பாஜக அவ்வப்போது எழுப்பி வருகிறது.
திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துரிமை, உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் தனித்தனியாக சட்டங்கள் ஒவ்வொரு மதத்திலும் உள்ளன.
அம்பேத்கரை அசிங்கப்படுத்திட்டாங்க.. காங்கிரஸ் மீது பழியை போட்ட அமித்ஷா! பரபரத்த குஜராத் தேர்தல் களம்
பொது சிவில் சட்டம் கொண்டு வர
பொதுசிவில் சட்டம் அமல்படுத்துவது என்பது மத்தியில் ஆளும் பாஜகவின் திட்டங்களில் ஒன்று என சொல்லப்படுகிறது. பாஜக தலைவ்ர்களும் அவ்வப்போது பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். மக்களவை தேர்தலின் போது பாஜக தனது தேர்தல் அறிக்கையிலும் பொது சிவில் சட்டம் நீக்கப்படும் என்று கூறியிருந்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து போன்றவற்றை பாஜக அரசு நிறைவேற்றி விட்டது.
சிறுபான்மையினர் எதிர்ப்பு
இதனால், பொதுசிவில்சட்டத்தையும் அமல்படுத்த வேண்ட அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு முஸ்லீம்கள் உள்பட சிறுபான்மையினர் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல.. என்பது அவர்களின் வாதமாக உள்ளது.
கட்டாயம் கொண்டு வரப்படும்
இந்த நிலையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொது சிவில் சட்டம் கட்டாயம் கொண்டு வரப்படும் என்று பேசியிருக்கிறார். இது தொடர்பாக அமித்ஷா கூறியதாவது:- பொது சிவில் சட்டம் என்பது ஜனசங்கம் காலத்தில் இருந்து பாஜக அளித்து வரும் வாக்குறுதி ஆகும். எனவே இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக உறுதியாக இருக்கிறது.
அனைவரும் மறந்து விட்டனர்
இந்த விவகாரத்தில் வெளிப்படையான ஆரோக்கியமான விவாதம் நடத்திய பிறகுதான் சட்டத்தை கொண்டு வருவோம். பாரதிய ஜனதா கட்சி மட்டுமே பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கவில்லை. இந்த சட்டத்தை உரிய தருணத்தில் கொண்டு வர வேண்டும் என அரசியல் நிர்ணயசபை அறிவுரை கூறியிருக்கிறது. இதை அனைவரும் மறந்து விட்டனர். நாடு, மாநிலங்கள் மதச்சார்பற்றதாக இருக்கின்றன. பிறகு எப்படி ஒவ்வொரு மதத்துக்கு ஏற்ப ஒரு சட்டங்கள் இருக்க முடியும்.
உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், குஜராத்
அனைத்து மதத்தினருக்கும் நாடாளுமன்றம், சட்ட சபைகள் நிறைவேற்றிய சட்டம் தான் இருக்க வேண்டும். உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், குஜராத் போன்ற பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவின் பரிந்துரையில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்
அரசின் வெற்றியாகவே பார்க்கிறேன்
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் சோதனைகளை அரசியல் கண்னோட்டத்தில் அணுக கூடாது. இந்த சோதனைகளில் யாருக்காவது குறை தென்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அரசின் வெற்றியாகவே பார்க்கிறேன். இதை எனது தனிப்பட்ட வெற்றியாக பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.