வரும் விவசாய சீசனில்... அறுவடையும் செய்வோம்.... போராட்டமும் செய்வோம்... ராகேஷ் டிக்கைட் திட்டவட்டம்
டெல்லி: வரும் அறுவடைக் காலத்தில் விவசாயம் செய்யும் அதேநேரம், போராட்டத்தையும் கைவிட மாட்டோம் என்று விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டம் இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடரும்போதும், இரு தரப்பிற்கும் இடையே இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக டெல்லியுள்ள ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாயச் சங்க செய்தித்தொடர்பாலர் ராகேஷ் டிக்கைட், "விவசாய சீசன் தொடங்கியவுடன் விவசாயிகளின் போராட்டம் முடிவடையும் என்ற தவறான எண்ணத்தில் அரசு இருக்கக் கூடாது. நாங்கள் விவசாயம் செய்வோம், அதே நேரம் போராட்டத்தையும் கைவிட மாட்டோம்.
அவர்கள்(அரசு) எங்களை வற்புறுத்தினால், நாங்கள் எங்கள் பயிர்களை எரித்துவிடுவோம். எங்கள் போராட்டம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்துவிடும் என்று மத்திய அரசு ஒருபோதும் நினைக்கக்கூடாது" என்றார்,
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இச்சட்டங்களை 18 மாதங்கள் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இருப்பினும், விவசாய சட்டங்களை நிரந்தரமாக ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.