தேசிய பாதுகாப்பிற்கு கீழ் ஒளிந்து கொள்ளாதீர்கள்.. செக் வைத்த சுப்ரீம் கோர்ட்.. ரபேல் வழக்கில் பரபர!
தேசிய பாதுகாப்பு என்பதற்காக ஒரு ஊழல் குறித்து விசாரிக்காமல் இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் ரபேல் வழக்கில் தெரிவித்துள்ளது.
டெல்லி: தேசிய பாதுகாப்பு என்பதற்காக ஒரு ஊழல் குறித்து விசாரிக்காமல் இருக்க முடியாது, ஆதாரம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ரபேல் வழக்கில் தெரிவித்துள்ளது.
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கி உள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் வவிசாரணை நடந்து வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இதை விசாரித்து வருகிறது. ரபேல் வழக்கில் புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் குறித்து இதில் விசாரிக்கப்பட்டது.
தி இந்து
இந்த வழக்கு விசாரணையில் தி இந்து பத்திரிகையில் பத்திரிகையாளர் என்.ராம் வெளியிட்ட கட்டுரைகள் முக்கிய விவாதத்தை ஏற்படுத்தியது. தி இந்து கட்டுரையை அரசு தரப்பு வழக்கறிஞர் கேகே வேணுகோபால், படித்து காட்டினார். கட்டுரையில் வெளியான புகைப்படங்களை காட்டினார்.
ரபேல் வழக்கு.. முதல் நாளே பரபரப்பு.. நீதிபதிகள் போட்ட அதிரடி ஆர்டர்.. காரசார வாதம்!
ரகசியம்
அவர் தனது வாதத்தில், கட்டுரையில் வெளியான புகைப்படங்கள் பாதுகாப்பு ரகசியம். அதை வெளியிட்டது தவறானது. இந்த ஆவணங்களை உலகம் முழுக்க வெளியிட்டு இருக்கிறார்கள்.இதை வெளியிட்டவர்கள் பெரிய தவறை செய்துள்ளனர். இதை ஏற்க கூடாது, என்று வேணுகோபால் குறிப்பிட்டார்.
ஆதாரம்
இதையடுத்து நீதிபதி கே.எம் ஜோசப், திருடப்பட்ட ஆவணங்களை கூட ஆதாரமாக நீதிமன்றம் ஏற்கும். ''எவிடென்ட்ஸ் ஆக்ட்'' சட்டத்தில் அதற்கு இடம் இருக்கிறது. ஊழல் நடந்திருந்தால் கண்டிப்பாக விசாரிப்போம். திருப்பட்ட ஆவணமாக இருந்தாலும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்.
தேசிய பாதுகாப்பு
தேசிய பாதுகாப்பிற்கு கீழ் ஒளிந்து கொள்ளாதீர்கள். பெரிய ஊழல் நடந்தால் அதை விசாரித்துதான் ஆக வேண்டும். அப்போதும் தேசிய பாதுகாப்பு என்று சொல்லி தப்பிக்க முடியாது, என்று நீதிபதி கே.எம் ஜோசப் குறிப்பிட்டார்.
ஆதாரம் முக்கியம்
ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் கேகே வேணுகோபால், அரசு ஆவணங்கள் எப்படி கசிந்தது என்று விசாரிக்க வேண்டும். பாதுகாப்பு ரகசியங்களை வெளியே கொடுத்தது யார். இதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஆதாரம் எங்கிருந்து வந்தது என்பது முக்கியம், என்றார்.
என்ன கேள்வி
நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். 2004ல் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அரசு தரப்பு வழக்கறிஞர் படித்து காட்டினார். திருடப்பட்ட ஆதாரங்களை விசாரிக்க கூடாது என்று இதில் கூறவில்லையே என்று தலைமை நீதிபதி கூறினார். திருடப்பட்ட ஆதாரத்தை நீதிமன்றம் விசாரிக்க கூடாது என்று மீண்டும் அரசு தரப்பு கூறியது.
காரசார விவாதம்
இதையடுத்து நீதிபதி ஜோசப், போபர்ஸ் வழக்கிலும் ஆதாரங்களை ஏற்காமல் இருக்கலாமா? அரசு ஏற்றுக்கொள்ளுமா. போபர்ஸ் வழக்கையும் தள்ளுபடி செய்யலாமா?., என்றார். நீதிபதி எஸ்.கே கவுல், எங்களுக்கு முன் ஓர் ஆதாரம் இருக்கிறது, அதை விசாரிக்க கூடாது என்று நீங்கள் எப்படி சொல்லலாம், என்றார். இதனால் அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் நீதிபதிகளுக்கும் இடையில் காரசார விவாதம் நடந்தது.