'வலிக்கிறது..' சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நடந்தது என்ன? மனம் திறந்த வார்னர்
டெல்லி: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் உரிய காரணம் இல்லாமல் தன்னை கேப்டன் பொறுப்பிலிருந்து விலக்கியதும், 11 பேர் கொண்ட அணியில் ஆட வாய்ப்பு தராததும் தனக்கு வலித்ததாக மனம் திறந்து கூறியுள்ளார் டேவிட் வார்னர்.
Recommended Video
டி20 உலகக் கோப்பையில் போட்டியின் தொடர் நாயகன் விருதை வென்றவர் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராகவும் இவர் குவித்த ரன்கள் ஆஸி. வெற்றிக்கு உதவின.
ஆனால் இவரைத்தான், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு தராமல் பாட்டில் தண்ணீரை தூக்க வைத்தது.

வார்னருக்கு அவமானம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி கேப்டனாக இருந்த டேவிட் வார்னரின் பதவியை பறித்த அணி நிர்வாகம், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனை கேப்டனாக்கியது. அத்தோடு விடவில்லை. 11 பேர் கொண்ட அணியில் இடம் தரவில்லை. ஐபிஎல் தொடரின் இரண்டாவது கட்டம் எமிரேட்சில் நடந்தபோதுதான் அவருக்கு இந்த அவமானம் பரிசாக கொடுக்கப்பட்டது. ஆனால் உலக கோப்பையில் அவர் ஆடிய ஆட்டம் அவரை அவமதித்தவர்களின் முகத்தில் கரி பூசி விட்டது.

மனைவி கிண்டல்
டேவிட் வார்னர் மனைவி சமூக வலைத்தள பக்கங்களில் ஐபிஎல் தொடரில் வார்னர் புறக்கணிக்கப்பட்டதையும், இப்போது உலக கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்ததையும் ஒப்பிட்டு கிண்டல் செய்திருந்தார்.

வேதனை அளிக்கிறது
இதுகுறித்து தி எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கைக்கு வார்னர் தற்போது சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், "பல ஆண்டுகளாக நான் மிகவும் விரும்பிய அணியில் இருந்து எந்த தவறும் செய்யாமல் என்னை நீக்கியதும், காரணம் கூறாமல் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதும் வேதனை அளிக்கிறது. அதே சமயம் இதை நான் புகாராக கூறவில்லை. இந்தியாவில் உள்ள ரசிகர்களை மகிழ்விக்க நாங்கள் கிரிக்கெட் விளையாடுகிறோம்." என்று வார்னர் கூறினார்.

வலைப் பயிற்சி
2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் பட்டம் வென்றபோது அணி கேப்டனாக செயல்பட்டவர் டேவிட் வார்னர். ஐபிஎல் 2021 இன் எமிரேட்ஸ் ஆட்டங்களில், இரண்டு போட்டிகளில் மட்டுமே இவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கியது. இருப்பினும், SRH அணியில் இடம் கிடைக்காத பிறகும், கடுமையாகப் பயிற்சி செய்து வந்ததாகவும், வலைகளில் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்ததாகவும் அது உலக கோப்பையில் உதவியதாகவும் கூறியுள்ளார்.

ஐபிஎல் அணி
"ஐபிஎல் அணியில் இடம் கிடைக்காமல் போனதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், நான் மிகக் கடினமான பயிற்சியை மேற்கொள்ள தவறவில்லை. நான் ஒரு நாளையும் தவறவிடவில்லை. நான் வலைப் பயிற்சியில் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தேன். எனக்கு எங்காவது வலி கிடைத்தால், எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்று எனக்குத் தெரியும்." இவ்வாறு வார்னர் தெரிவித்தார்.

சிறப்பான பேட்டிங்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது. டேவிட் வார்னர் பேட்டிங்கில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்தார். முடிவடைந்த டி20 உலகக் கோப்பையில் வார்னர் 7 இன்னிங்ஸ்களில் 289 ரன்கள் எடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications