"நேர்மை"யா இருக்கணும் பாருங்க.. போர் கொடி தூக்கும் இளம் தலைவர்கள்.. காங்-இல் அடுத்த பூதம்? என்னாச்சு
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடக்க உள்ள நிலையில், கட்சிக்கு உள்ளே இப்போதே சில கோரிக்கைகள் எழ தொடங்கி உள்ளன.
காங்கிரஸ் கட்சி இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. தொடர் தோல்வி, மூத்த தலைவர்கள் வெளியேறுவது உள்ளிட்டவை காரணமாகக் காங்கிரஸ் தலைமை மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது.
2019 மக்களவை தேர்தல் தோல்விக்குப் பொறுப்பு ஏற்று ராகுல் காந்தி தலைவர் பொறுப்பில் இருந்து விலகி இருந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியால் புதிய தலைவராக யாரையும் தேர்வு செய்ய முடியவில்லை.
”தமிழ் மிகவும் அழகான மொழி” கற்றுக் கொள்வதற்கு கடினம்.. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலகல!
காங்கிரஸ்
சோனியா காந்தியே காங்கிரஸ் இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்ய வரும் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ராகுல் காந்தி போட்டியிடுவாரா இல்லையா என்பது இன்னும் கூட உறுதியாகத் தெரியவில்லை. அப்படி அவர் போட்டியிடவில்லை என்றால் அசோக் கெலாட்டை களமிறக்கச் சோனியா காந்தி தரப்பு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடிதம்
இந்தச் சூழலில் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறை வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் வாக்களிக்கும் நபர்களின் பெயர்களை பொதுவெளியிலோ அல்லது வேட்பாளர்களிடமோ அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் மதுசூதன் மிஸ்திரிக்கு ஐந்து காங்கிரஸ் எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர். கடந்த செப். 6ஆம் தேதி அவர்கள் இந்த கட்டிடத்தை எழுதி உள்ளனர்.
எந்த எம்பிக்கள்
காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படும் சசி தரூர் மற்றும் எம்பிக்கள் கார்த்தி சிதம்பரம், பிரத்யுத் போர்டோலோய் மற்றும் அப்துல் கலீக் ஆகியோர் இந்தக் கடிதத்தைக் கூட்டாக எழுதியுள்ளனர். அதில் அவர்கள், "வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைக்குத் தவறான விளக்கம் அளிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. கட்சியின் ஆவணங்கள் எதையும் நாங்கள் வெளியிடச் சொல்லிக் கேட்கவில்லை என்றும் வாக்காளர் பட்டியலை மட்டுமே கேட்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடைசி தேர்தல்
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அங்குத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடைசியாக 2000இல் நடந்த தேர்தலில் ஜிதேந்திர பிரசாத் சோனியாவுக்கு எதிராகப் போராடித் தோல்வியடைந்தார். அதற்கு முன்னதாக 1997இல் சரத் பவார் மற்றும் ராஜேஷ் பைலட்டை வீழ்த்தி சீதாராம் கேஸ்ரி தலைவரானார். இந்த இரு தேறுதலைகளைத் தவிரக் கடைசி 50 ஆண்டுகளாகவே காங்கிரஸில் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடந்தது இல்லை.
என்ன பிரச்சினை
இப்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தான், கட்சியின் 5 எம்பிக்கள் நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அதில் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் எனக் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் பொதுவெளியில் வாக்காளர் பட்டியலை வெளியிட முடியாது என மறுத்துள்ள மதுசூதன் மிஸ்திரி, வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்காளர் பட்டியல் அளிக்கப்படும் என்றார்.
ஏன் வெளியிட வேண்டும்
இதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால் காங். தலைவர் தேர்தலில் போட்டியிடக் குறைந்தது 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும். யாருக்கெல்லாம் வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பதே தெரியாமல் எப்படி வேட்புமனு தாக்கல் செய்வது என்பது அவர்களின் வாதம். எனவே, பொதுவெளியிலோ அல்லது யார் போட்டியிட விரும்புகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என இந்த எம்பிக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சிக்கல்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நீண்டு இருக்கும் காங்கிரஸ் கட்சியில் சுமார் 9000 பேர் வாக்களிக்கும் உரிமையைப் பெற்று உள்ளதாகத் தெரிகிறது. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத்தில் குறிப்பிட்ட பதவிகளில் இருப்பவர்கள் உள்ளிட்ட சில பொறுப்பில் இருப்பவர்களால் மட்டுமே இதில் வாக்களிக்க முடியும். இருப்பினும், பல மாநிலங்களில் இந்தப் பட்டியல் இன்னும் முழுமையடைவில்லை என்று கூறப்படுகிறது.
முக்கியம்
எனவே, யார் வாக்காளர்கள் என்றே தெரியாமல் எப்படிப் போட்டியிட முடியும் எனக் கேள்வி எழுப்பும் இந்த இளம் எம்பிக்கள், வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தேர்தலுக்குக் காங்கிரஸ் கட்சியே தயாராகி வரும் நிலையில், இந்த இளம் தலைவர்களின் கடிதம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.