அடுத்த மன்மோகன் சிங்னு நினைப்பா? அரசியலுக்கு ரெடியாகும் ரகுராம் ராஜன்? பாஜக கேள்விக்கு பரபர பதில்
டெல்லி: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன், ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கலந்து கொண்டது பல அரசியல் சார்ந்த கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில், இது தொடர்பாக அவரே விளக்கமளித்துள்ளார். தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.
மத்திய ரிசர்வ் வங்கியின் 23ஆவது கவர்னராக கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை இருந்தவர் ரகுராம் ராஜன். இந்தியப் பொருளாதாரத்தையும் அந்நிய செலாவணி கையிருப்பையும் அதிகரிக்க அப்போது அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
அவரது பதவிக்காலம் 2016இல் நிறைவடைந்த நிலையில், அப்போது அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், மத்திய பாஜக அரசு அவரது பதவிக்காலத்தை நீட்டிக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியராக பணிக்குத் திரும்பினார்.

பாத யாத்திரை
இருந்த போதிலும், அவர் தொடர்ச்சியாக இந்திய பொருளாதாரம் குறித்து முக்கிய கருத்துகளைக் கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரையிலும் அவர் கலந்து கொண்டார். இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரகுராம் ராஜன் அரசியலில் வர உள்ளதாகவும் அதன் ஒரு பகுதியாகவே அவர் இந்த ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டதாகவும் பலரும் கூற தொடங்கினர். இந்நிலையில், இது தொடர்பாக அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விரிவாக விளக்கியுள்ளார்.

ரகுராம் ராஜன் விளக்கம்
இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ரகுராம் ராஜன், "நமது மிகப்பெரிய பலம் ஜனநாயகம் என்று நான் நம்புகிறேன்.. மத நல்லிணக்கம், விவாதம் ஆகியவை தான் இந்த நாட்டை இந்தளவுக்குக் கூட்டி வந்துள்ளது. இதை நான் முழுமையாக நம்புகிறேன். ஆனால், இவை அனைத்தும் இப்போது அச்சுறுத்தலில் இருக்கிறது. ஒரு குடிமகனாக, நமது நாட்டின் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று கூறுபவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான் இந்தியர்கள் இணக்கமாக வாழ்வார்கள். எனவே, ஒரு குடிமகனாக அந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டேன்.

தொடர்பு இல்லை
இதற்காக நான் அரசியலுக்கு வருகிறேன் எனச் சொன்னால் என்ன செய்ய முடியும். நான் இந்தியாவின் குடிமகன் என்பதைத் தவிர, இது வேறு எதையும் காட்டவில்லை.. இந்த விஷயங்களை நான் நம்புகிறேன். இதற்கும் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என்றார். ரகுராம் ராஜன் இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. ரகுராம் ராஜன் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பட கலைஞர்கள் எனப் பலரும் இந்த பாக யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.

ஆபத்தில் இந்தியா
அதற்கு முன்பு ராகுல் காந்தியுடன் ரகுராம் ராஜன் ஒரு சிறிய உரையாடலை நடத்தியிருந்தார். அதிலும் ரகுராம் ராஜன் நாட்டின் பொருளாதார நலன் குறித்துப் பல முக்கிய தகவல்களைத் தெரிவித்திருந்தார். அதில் அவர், "இப்போது நாட்டில் குறிப்பிட்ட சில தொழிலதிபர்களிடம் செல்வம் குவிந்து சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது. நம்மால் முதலாளித்துவத்திற்கு எதிராக இருக்க முடியாது..

பொருளாதார கொள்கை
அதேநேரம் நாம் சந்தையில் போட்டிகளை உருவாக்க வேண்டும். நாம் ஒற்றை நிறுவனத்தின் ஆதிக்கம் ஏகபோகத்தை (monopoly) எதிர்க்க வேண்டும் நடுத்தர மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அரசு கொள்கைகளை உருவாக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்திருந்தார். மத்திய பாஜக அரசின் பொருளாதார கொள்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வரும் நபர்களில் ஒருவராக ரகுராம் ராஜன் உள்ளார். இதற்கிடையே ரகுராம் ராஜனையும் பாஜக சாடியிருந்தது.

அடுத்த மன்மோகன் சிங் நினைப்பா
அக்கட்சியின் தேசிய ஐடி பிரிவின் இன்சார்ஜ் பாஜகவின் அமித் மாளவியா அப்போது தனது ட்விட்டரில், "காங்கிரசால் நியமிக்கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்ததில் ஆச்சரியமில்லை. அவர் தன்னை அடுத்த மன்மோகன் சிங் என்று நினைத்துக் கொள்கிறார். இந்தியப் பொருளாதாரம் குறித்த அவரது கருத்துகளை முழுமையாக நிராகரிக்க வேண்டும். இது ஒருதலைபட்சமானது மற்றும் சந்தர்ப்பவாதமானது" என்று அவர் சாடினார்.












Click it and Unblock the Notifications